Pages

வாசகர் வட்டம்

Wednesday, August 11, 2010

வலித்தாலும் வாழ்க்கை அழகானது

டிக் டிக் டிக்

ஓயாமால் கேட்டபடி

என்ன அது

அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது

அது ஒரு சுவர் மணிக்கூடு

அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்கும்
. பார்த்தவர்களுக்கும்..என்னை வருத்தக்காரன் மாதிரி என்று சொல்ல தோன்றாது....

ஏதோ தேவைக்காக யாருக்காகவோ ஆஸ்பத்திரி வந்த என்னை ஏதோ வருத்தமென்று பிடித்து வைத்திருக்கிறார்கள்...இரத்த பரிசோதனையில் ...வருத்தம் என்று டொக்டருக்கு தெரிந்திருக்கிறது ...அந்த செக்கிங் இந்த செக்கிங் எல்லா முடிந்தும் என்ன வருத்தம் என்று தெரியவில்லையாம் அதுக்காகவே சின்ன சத்திரசிகைச்சை செய்ய வேண்டுமாம்...

நாளைய பிணங்கள் இன்றைய நடை பிணங்கள் நேற்றைய சராசரி மனிதர்கள்..எல்லாரும்.இந்த வார்ட்டுக்குள் ..அவர்களை...குசலம் விசாரிக்க உறவினர்கள்...அன்பாகத் தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...இப்படி எப்பவும்.மற்ற சமயங்களில் அன்பாகத் தான இருந்திருப்பார்களா . ...ஏன் என்னுள் எழவேண்டும் இந்த கேள்வி ..ஏன் இந்த அவநம்பிக்கை ..என்று என்னை கேட்க இந்த மனசுக்கு அவகாசம் கொடுக்கவில்லை......இந்த ...சுவர் மணிக்கூடு எனது கட்டிலில் அருகில் இருந்து கொண்டு மீண்டும் தொல்லை கொடுக்கிறது

டிக் டிக் டிக்

ஓங்கி உதை விட்டு உடைக்க வேணும் போல் இருந்தது ...உடைக்கலாம் ..எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. பக்கத்து பெட்டில் இருக்கிறவன் ..லொக் லொக் என்று பிரேக் போடமால் இருமி கொண்டு இருக்கிறான்

இந்த அவல இருமலின் கனைப்பிலும் பார்க்க இந்த மணிக்கூட்டின் சிணுங்கல் எவ்வளவோ பரவாயில்லை என்று உணர்த்தியது

டிக் டிக் டிக்

இது தான் இந்த கணம் தான் உண்மை என்று அடிக்கடி உணர்த்தி கொண்டிருக்குதோ....

நாளைக்கு சத்திரசிகிச்சை ...இன்றைக்கே நான் சத்திரசிகிச்சை கூடத்தில் மனத்தளவில்...ஒரே பய பீதி ...ஒரு முறையும் இது வரை சத்திரசிகிச்சை செய்ய வில்லை...மரணமும் ஒருமுறையும் நிகழவில்லை தானே...அதை எல்லாம் நினைத்து இவ்வளவு காலம் பயந்து இருந்தேனா

.இந்த மணிக்கூடு டிக் டிக் என்று சத்தம் போட்டு விரைந்து ஓடுவதால் அதில் அந்த வெறுப்போ.....மணிக்கூட்டை ஓடாமல் சத்தத்தை நிறுத்தி விட்டால்...நாளை வராமாலா விடப்போகுது...அது சரி நாளை வராமால் இன்று எப்பவும் இருந்தால் நான் ஆஸ்பத்திரியில் எல்லவோ எப்பவும் இருக்கோணும்

அழகான பெண் நர்ஸுகளும் டாக்டர்களும் அங்கும் இங்கும் சிரித்து ஏதோ கதைத்து கலப்பாக கலப்பாக சென்று கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு என்ன அங்கு வேலை செய்பவர்கள் ....எங்களை போல நோயாளிகளா என்ன...அவர்களுக்கு ...இந்த ..டிக் டிக் உதவக்கூடும்....சிலருக்கு சிப்ட் முடிய உதவும் சிலருக்கு தொடங்க ..உதவும்...


அதில்....ஒரு நர்ஸ் கனிவோடு அந்த பக்கத்து பெட் கிழடோடு என்று பேசி கொண்டிருக்கிறாள்.......எனக்கு கொஞ்சம் பொறாமை தான் ..கொஞ்சம் முந்தி என்னோடு கனிவோடு மட்டு மன்றி சிரிக்க சிரிக்க பேசினாள்......அது அவளுடைய வேலை ..அவளுக்கு அப்படி பயிற்ச்சி அளிக்க பட்டு இருக்கிறது..என்று அந்த கணத்தில் புத்தி வேலை செய்யவில்லை


சத்திர சிகிச்சை பயத்தில் இருக்கும் பொழுது தேவையா இது என்று கேட்டால்....எந்த பய பீதியிலும்...ஹி..ஹி..ஹி....வாழ்க்கையின் சுவராசியமே அதில் தானே அடங்கி இருக்கிறது..... எல்லா நேரம் வாழ்க்கையில் பயந்து கொண்டு இருக்க முடியுமா...மரணமும் கட்டாயமும் நிகழத்தான் போகிறது....அதுக்காக இன்றைக்கே சுடுகாட்டில் இருக்க வேண்டுமா என்ன

நாளையை நாளை பார்த்து கொள்ளட்டும் என்று இருந்தால்...நாளையும் வந்து விட்டது..

அவள் அந்த நர்ஸ்தான் என்னை அந்த ஆஸ்பத்திரி கட்டிலில் வைத்து தள்ளி கொண்டு போகிறாள்....இப்படி எத்தனை பெயரை தள்ளி கொண்டு சத்திரசிகைச்சை கூடத்துக்கு போயிருப்பாள்...அவளிடம் தான் கேட்கிறேன்....இது என்னுடையது மைனர் ஒப்பிரேசன் தானே .. ரிக்ஸ் ஏதாவது இருக்குமே.என்று..அவள் சாதாரணமாக சொல்லுறாள் ...எந்த ஒப்பிரேசனும் ரிக்ஸ் தான் என்றாள்.சர்வ சாதாரணமாக

சத்திர சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை ஒன்று வீல் வீல் என்று சத்தம் போடுகிறது மற்ற பக்கத்தால் தள்ளி கொண்டு செல்லுகிறாள் இன்னோரு நர்ஸ்.அந்த குழந்தைக்கே வாழ்க்கையை தொடங்க முன்பே ...எங்களின் பட படப்பு அதுக்கு இப்பவே பற்றி கொண்டு விட்டது....

மயக்க மருந்து கை களினூடாக ஏற்றுகிறார் சத்திர சிகைச்சியாளர்.....மரணத்துக்கு பின்பு போல ..அதுக்கு பின் ஒன்றுமே தெரிய வில்லை

...அதே..டிக்...டிக் .. டிக் சத்தம் ..அந்த மணிக்கூட்டுக் கீழ் உள்ள
கட்டிலில் ...நான் ......உடம்பில் ...வலித்தது....உயிரோடு இருக்கிறேன் என்ற உணர்வு என்னிடம்...

வலித்தாலும் ...வாழ்க்கை அழகானது..

Thursday, August 05, 2010

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம்

திரைப்பட வரலாற்றில் தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் நிறைய இருந்திருக்கின்றன.. ஏன் திராவிட எழுச்சிக்கே திரைப்படத்தில் வரும் எழுத்தின் தாக்கம் மிக உதவியது.. மனோகராவில் பத்மாவதியாகா வரும் கண்ணாம்பா பேசும் வசனம் இது,"செவ்வாழைத்தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மங்கை உருவில் மகான் உருவில் இந்த மண்ணை வளைக்க வந்த மகாபாதர்களே!சரித்திரத்தை மறந்தவர்களே! செப்படி வித்தையால் செழுந்தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறுநரிக்கூட்டமே!". இப்படியான எழுத்துக்களால் எழுத்தாளர்கள் சினிமாவின் சாதனத்தில் புகுந்து சிந்திக்க வைப்பதோடு அந்தக் காலம் எழுச்சியூட்டினார்கள்

கல்கி புதுமைபித்தன் தொடங்கி இன்றைய பிரபலஎழுத்தாளர்கள் வரை சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறது.
புதுமை பித்தன் 1940 களில் வெளிவந்த காமவல்லி என்ற படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தாராம். இதே போல் கல்கி அவர்களுக்கும் சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறதாம். தம்முடைய நாவல்கள் எல்லாம் திரைபடங்களாக வேண்டுமென பெரிதாக விரும்பினாராம். அந்த வகையில் கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவல் பொன் வயல் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதே போல் கல்கியின் புகழ் பெற்ற "கள்வனின் காதலி" என்ற நாவல் திரைப்படமாக சிவாஜி பானுமதி நடிப்பில் 50களில் வெளிவந்திருந்தது. கல்கியின் முதல் வரலாற்று நாவலான "பார்த்திபன்கனவு" திரைப்படமாக வந்தது. அப்பொழுது கல்கி உயிருடன் இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் கமலகாசன் போன்றவர்கள் திரைப்படமாக்க முயற்சித்தார்க‌ள், ஆனால் இன்று வரை கை கூடவில்லை.


எழுத்தாளர் அகிலனின் புகழ் பெற்ற "பாவை விளக்கு" நாவலும் திரைப்படமாகியது. அகிலனின் மற்றொரு புகழ் பெற்ற, பரிசு பெற்ற நாவல் "வாழ்வு எங்கே". "குலமகள் ராதை" என்ற பெயரில் திரைப்படமாகியது. இரண்டிலும் சிவாஜி கணேசன் தான் கதாநாயகன் . இன்னுமொரு பரிசு பெற்ற நாவலான கயல்விழி என்ற நாவல்.. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக" வந்தது.


கன்னிமாடம் , யவனராணி கடல்புறா என நாற்பதுககு மேற்பட்ட நாவல்களை எழுதியிருந்த சாண்டில்யன் கூட "என்வீடு" என்ற திரைப்படத்திற்க்கு வசனம் எழுதியுள்ளார்.சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களும் ஆனந்த விகடனில் வெளிவந்த குறுநாவல் "யாருக்காக அழுதானை" நாகேசை வைத்து படமாக்கினார்.அதே போல் "உன்னைப்போல் ஒருவன்" என்ற நாவலை படமாக்கி இந்திய அதிபரின் பரிசைப்பெற்றார். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்", லட்சுமி நடிப்பில் உருவான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்றவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன.


கல்கண்டு பத்திரிகையை நடத்தி மற்றும் துப்பறியும் சங்கர்லால் மர்ம நாவலை எழுதி புகழ் பெற்ற தமிழ்வாணன்,ஜெயசங்கர் நடித்த "காதலிக்க வாங்க" என்ற படத்தை தயாரித்து கதை வசனம் எழுதியுள்ளார்.


மு.வ என்று அழைக்கப்படும் வரதராசன் அவர்களுடைய "கள்ளோ காவியமா" என்ற நாவல் "எங்கள் செல்வி" என்ற பெயரில் திரைப்படமாகியிருந்தது. அதில் ஏ.நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.மு.வ எழுதிய மற்றொரு நாவலான "பெற்றமனம்" கூட சிவாஜி நடித்த படமாக வெளி வந்திருந்தது.


சூரியகாந்தம்,மிதிலா விலாஸ்,காஞ்சனையின் கனவு என்று பல நாவல்களை எழுதியுள்ளார் பெண் எழுத்தளாரான லட்சுமி. அவருடைய காஞ்சனையின் கனவு என்ற நாவல் காஞ்சனாவாக 50 களில்திரைப்படமாக வெளி வந்திருந்தது. இதில் பத்மினி நடித்திருந்தார்.
மற்றுமொரு பெண் எழு்த்தாளரான சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை பாலசந்தர் அவர்களும் திரைப்படமாக்கியிருந்தார்.சிவசங்கரியின் மற்றுமொரு படைப்பான "அவன் அவள் ‍அது" திரைப்படமாகி சிவகுமார்,லட்சுமி,சிறிப்ரீயா நடிப்பில் வெள்ளி விழா கண்டது.

அநுத்துமா,லட்சுமி சுப்பிரமணியம் ஜோதிர்லதா கிரிஜா, அம்பை இந்துமதி, திலகவதி, சிவகாமி போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் கூட திரைப்படமாக்கக்கூடிய சிறந்தவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் இவர்களுடைய நாவல்கள் திரைப்படமானாலும் அதிசய படுவதற்க்கில்லை

ஆனந்தவிகடனில் தொடராக வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனம்பாள் திரையில் வந்து சக்கை போட்டது.சுஜாதாவின் இரண்டு நாவல்கள் படமாயிருக்கின்றன. அதில் கரையெல்லாம் செண்பகப்பூ என்று படமான நாவல் நா.வானமாமலை தொகுத்த நாட்டுப்புற பாடல்களை வைத்து எழுதியதாக சொல்வார்கள்.சுஜாதாவின் மற்றுமொரு நாவலான "ப்ரியா"வும் திரைபடமாகியுள்ளது . இதில் ரஜனி சிறிதேவி நடித்திருந்தார்கள். ப்ரியா நாவலின் களம் லண்டனிலிருந்தது. படத்தில் மலேசியா சிங்கப்பூரில் எடுத்திருந்தார்கள்.கோமல் சுவாமிநாதன் என்ற எழுத்தாளரின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தைதான் பாலசந்தர் அவர்கள் "தண்ணீர் தண்ணீர்" என்று திரைப்படமாக்கினார்.

ஈழத்தில் கூட செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைபடமாகியது.ராமதாஸ் அவர்கள் எழுதிய கோமாளிகள் ஏமாளிகள் றேடியோ நாடகம் திரைபடமாக வந்திருக்கிறது. கே.எஸ் பாலசந்தரனின் றேடியா நாடகம் தணியாத தாகம் திரைக்கதை அம்சத்துடன் இருந்தது. படமாக்க முயற்ச்சித்தார்களோ தெரியாது.

இப்படி இன்று வரை தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் சினிமாவில் இருந்து கொண்டேயிருக்கிறது.கமலகாசன் ஒருமுறை சிற்றிலக்கியக்காரரை சினிமாவில் வந்து பங்காற்ற வரும்படியும் அதன் மூலம் தரமான திரைப்படங்களை உருவாக்க அவர்கள் உதவ வேண்டும் கூறியது ஞாபகம் வருகிறது.

Wednesday, August 04, 2010

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்ச நேரம்


இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது

.நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர் மனைகளின் தொடர்ச்சிகள் தொடங்குகின்றன.தனித்து விடப்பட்ட அந்த சுண்ணாம்பும் சீமேந்து கலவையிலான அந்த ஓட்டு வீடு தான் அப்பம்மாவின் வீடு. அவவின் ஒரே பிள்ளையான அப்பர் பல முறை எங்களோடை வந்து இரு என்று கேட்டும் வராமால் பூதம் காத்த மாதிரி கொண்டு வாழ்ந்து கொண்டு வருது.. எங்கட றோட்டுக்கரை வீட்டிலிருந்து உள் ஒழுங்கைகள் ,காணிகளூடான ஒற்றையடி பாதைகளுக்களாலை போனால் உந்த வயல் மூலையிலுள்ள வைரவ கோயிலடியிலை மிதக்கலாம் ஒரு இரண்டு மைல் தானிருக்கு்ம்.

உந்த போகும் வழியில் அருகருகே வீடுகள் குறைவு சில இடங்களில் பத்தைகளாக கவனிப்பாரற்று கிடக்கும் காணிகளின் ஊடாக உந்த ஒற்றையடி பாதை வளைந்து செல்லுகிறது .பகலிலை என்றால் பிரச்சனை இல்லை . பாம்பு வேற விச ஜந்துகள் ஆக்கள் மிதிக்கோணும் நாங்கள் பதம் பார்ப்பம் என்ற மாதிரி போற வழியில் ஓய்வு எடுப்பினம் கொஞ்சம் இருட்டிட்டு என்றால் ரிஸ்க் எடுத்து கொண்டு தான் உதுக்காலை போகோணும்.

வைரவர் கோயிலடி அண்மையிலுள்ள கேணிகட்டில் சில இளைஞர்கள் சிரித்து கும்மாளமடித்து கொண்டிருக்கின்றனர் சில சிறுசுகள் அந்த கோயிலை சுத்தி திரியற பைத்தியத்தின் மேல் கல் எறிந்து வெறுப்பேத்தி விளையாடுகின்றனர்... ஒரு சோலி சொரட்டுக்கும் போகாத சும்மா தன் பாட்டில் புலம்பி திரியும் பைத்தியம். பாவம் அவர்களினது சேட்டைகளில் இருந்து தப்பிக்க படாத பாடு படுகுது. இன்னும் இருளவில்லை இருள முன்னம் கலைந்து விடுவார்கள்.உந்த வேப்ப மரத்தில்
முனி இருக்கு என்று கன காலமாக ஆக்கள் கதைக்கிறவை. கண்டவை கூட இருக்கினமாம் கொஞ்சம் தூரத்திலை சுடலையும் இருக்கிறதாலை பட்டினசபை லைற் கம்பமும் இஞ்சால் பக்கம் இன்னும் வரலை. கொஞ்சம் இருண்டால் காணும் இந்த பிரதேசத்தை பயங்கரமான இடமாக பிரகடபடுத்தி வைச்சுருக்குதுகள் சனங்கள். சங்கு ஊதி மணி அடித்து கேட்கிறது சவ ஊர்வலம் ஒன்று சுடலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. சிரித்து கும்மாளமடித்த கொண்டிருந்த இளைஞர்கள் அமைதியாகி பின்னு க்கு கைகட்டி ஒரு வித இனம் தெரியாத உணர்வுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர் . பிரேதத்துக்கு கை காட்ட கூடாதாம் கை காட்டினால் கை அழுகிடுமாம். இப்படி எத்தனை புலுடாவை சொல்லி வைச்சிருக்கினம் சனம்.
இந்த வைரவ கோயிலிலுருந்து அப்பம்மா வீடு வரை ஒரே வெளி ஒரு புறம் வயல் வெளி மறு புறம் சதுப்பு நிலம்... இருளுக்கு முன்னுக்கு போய் இருள முந்தி திரும்பி வர எண்ணி நினைச்சனான் ஆனாலும் இருள் என்னை முந்தி மெல்ல விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்பம்மா வீட்டு முன் மாமர இருட்டு இன்னும் அந்த வீட்டு தனிமையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.அப்பம்மாவின் தனிமையை போக்க அவ வளர்க்கும் மாடுகள் தாங்களே தங்கள் முகத்தால் உந்தி கேட்டை திறந்து உள்ளே போகின்றன.லாம்பு வெளிச்சத்தை கொஞ்சம் தூண்டிய படியால் என்னவோ இருளை கிழித்து வந்த வெளிச்சத்த்துடன் வந்த அப்பம்மாவின் குரல்

காடு கழிஞ்ச நேரம் எங்கை திரியிறாய் மோனை.. என்ற படி.. அண்டைக்கு சொன்னான் உந்த சுடலை குருவி கீச்சிடக்கை ஆரோ ஊருக்கிளை மண்டையை போடப்போயினம் என்று நீ நம்பேலை பாத்தியே என்றது ஏளனக்குரலில்
கொஞ்ச காலாமாக பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கிற தாடிக்கார மாமா வின் கதைகளை கேட்டா பிறகு இவவின்ரை மூட கதைகளை நம்பமால் உவவோடை வாதிடுறனான்.. அது தான் இப்ப நிறுவி நெளிச்சு காட்டுது உந்த மனிசி..

நல்லாய் இருட்டிட்டுட்டுட்து.. அமவாசை முன்னிருட்டு வேற.. வரக்க இருந்த சந்தோசம் இப்ப திரும்பக்க இல்லை பயப்பட ஒன்றும் இல்லை என்று உள் மனம் சொல்லிக்கொண்டாலும் வெளி சூழ்நிலைகள் பயத்தை கிளம்பிக்கொட்டி கொண்டிருந்தன. வயலின் அந்த மூலையில் சுடலையில் பனை இடுக்குககாளில் பிணம் எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.. இவ்வளவு நேரமாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் எரிந்து முடியல்லை .. வாழக்கையில் சில வேளை சில பேர் சில நேரத்தில் சொல்றவை இந்த கட்டை அவ்வளவு கெதியில் வேகாது என்று. உதுவும் அப்படியான கட்டை ஒன்று போலை.

முன்னுக்கு பக்கத்தில் வட்டமாக நெருப்பு மாதிரி சிறிய நெருப்பு அசைந்து வந்து என்னை கடந்து கொண்டிருந்தது. ஆரோ ஒருவர் சுருட்டை பத்தி கொண்டு எதிரான பக்கம் செல்கிறார் போலை அவர் செல்கிற வேகம் செருமல் அவரது பயம் பிராந்தியை எல்லாத்தையும் நல்லாய் காட்டியது..

இப்பொழுது நான் மட்டும் தான் அந்த வெளியில். தூரத்தில் தெரியும் அந்த வைரவர் கோயிலில் பயம் காட்டி எரியும் தூண்டமாணி விளக்கை கடந்து விட்டால் பிரச்சனை இல்லை . அங்காலை போனால் பாம்பு பூச்சிகள் தானே தெரிஞ்ச சாமான்தானே. பயம் இல்லை. தெரியாததுக்கு தானே சரியான பயமாயிருக்கு இந்த மரணம் பேய் பிசாசு முனி எல்லாம் அப்படியான விசயம் தானே.....

பாதையின் மற்ற பக்கத்தில் சதுப்பு நில பக்கத்திலிருந்து உயரமாக நெருப்பு துகள் என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது... அப்பம்மா சொல்ற மாதிரி கொள்ளி வாய் பிசாசோ.. வேகமாக ஓட வேகமாக ஓட வேகமாக துரத்துது மெதுவாக நடந்தால் மெதுவாக துரத்துது .. கிறிஸ்ரோபர் அலி நடிக்கும் ட்ரகுலா படங்களில் சிலுவையை காட்டி தப்பிக்கிற மாதிரி... ஏதாவது தேவாரம் பாடி தப்பிக்கலாம் என்று பார்த்தால் பித்தா பிறைசூடி... அங்காலை உள்ள வரிகள் சரியாக ஞாபகம் வர மாட்டுட்டுது.. பக்கத்து வீட்டு மாமா சொன்னவர் மெதேன் என்ற வாயு சதுப்பு நிலங்கள் உருவாகிறது என்று. அதைத்தான் கொள்ளி வாய் பிசாசு என்று சொல்றவை என்று.. உந்த புத்தி வேலை செய்யவில்லை தூண்டாமணி விளக்கடி மட்டும் மூச்சிறக்க ஓடிவந்தேன் .திரும்பி பார்த்தேன் நெருப்பு வெளிச்சத்தை காணவில்லை .

இங்காலை வைரவர் கோயிலடி வேப்பமரத்தடியில் திருப்பி பார்த்தன் ஓர் கரிய உருவம் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது......... ஹிஹி சிரித்தபடி... வைரவரா , முனியா ...வையந்திமாலாவை கல்யாண கட்ட போறனே. என்றபடி......கேட்ட குரலாக. இருக்கே... அந்த கோயிலை சுத்தி திரிந்த கொண்டிருக்கிற பைத்தியம் அதே தான்..

மீண்டும் அந்த குரல் கேட்க பேயடித்த நிலமையிலிருந்து திரும்ப வைத்தது. தூரத்தில் உள்ள சவக்காலைக்குள் கீச்சு சத்தம் போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிது அந்த குருவி.


Tuesday, August 03, 2010

எழுபதுகளில் தமிழ் சினிமா பெற்ற திருப்பு முனை



1973 இல் வெளியான அரங்கேற்றம் தொடர்ந்து இன்று வரை சினிமாவை பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும் sex பிரச்சனைகளை பயன் படுத்த முடியும் அலசி ஆராய இயலும் என்ற உயர்தர நோக்கு இல்லாமல் செக்சை இனிமேல் காட்டி பணம் பண்ண முடியும் என்று இப்படம் நம்பிக்கையை துணிச்சலையும் அளித்ததை மறுக்க முடியாது. இதே காலகாட்டத்தில் வட நாட்டு இந்தி படமான நியூவேவ் தமிழில் அவளாக மாறி. சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் கடற்கரையில் உருளும் காட்சி மூலம் தமிழ் A பட அந்தஸ்து க்கான படவரலாறு ஆரம்பிக்கபட்டது. அதே நேரத்தில் நடுத்தர பிரமாண குடும்ப அக்கிராகர அவலத்தை அரங்கேற்றம் படத்தின் மூல கொண்டு வர முயன்றதால் பாலசந்தர் பல எச்சரிக்கைகளை எதிர்ப்பை எதிர்நோக்கினார். அரங்கேற்றம் படத்திற்க்கு இந்த ஆபாச அந்தஸ்து சமரசம் செய்யும் முதுகெலும்பில்லாத முடிவு தான் காரணம் தான் என்பதை மறுக்க முடியாது

இதன் பின் அடுத்து வெளி வந்த படங்களான அன்னக்கிளியும் 16 வயதினிலும் பழைய வகை சினிமாவில் உள்ள போர்மிலா வகை தன்மையை நிராகரித்ததுடன். திரை பின்னால் இருந்த டைரக்சன் இசை எடிட்டிங் கமரா போன்றவற்றை சிலாகித்து கதைக்க கூடிய வகையில் புதியதோர் டெக்னிக்கில் மாற்றத்தை செய்தன. இளையராஜா நாட்டார் பாடல்களை மேற்கத்தைய கலவையுடன் சேர்த்து இசை அமைப்பால். பாடல்களும் ஒரு வித்தியாசமான தோரணையில் வெளிவந்தன.. இந்த காலகட்டத்தில் தான்.நடிகர்களின் தனி ஏகோ போக உரிமையை மட்டும் நிராகரித்து திரைக்கு பின்னால் பணியாற்றுவர்களின் தனி தனி திறமை பற்றி உற்று நோக்கப்பட்டது. இந்த சினிமா மாற்று சூழ் நிலை இதன் பின்னர் வந்த ஒரு தலைராகம் படத்தின அபார வெற்றியினூடாக மேலும் வலுவாகியது. சென்னை போன்ற நகர் புறங்களில் வெற்றி பெறும் படம் உசிலம்பட்டி சோழவந்தான் போன்ற கிராமங்களிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இந்த கால கட்டத்தில் தான் நடிகர்களுக்காக படம் ஓடிய நிலமை மாறி... டைரக்டர் களுக்காக படம் பார்க்கும் நிலை வந்தது. சினிமா பாமரச ரசனையை சற்று மாறு படுத்தி ரசிக்க வைக்கும் முயற்சி ஏற்பட்டது. மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரி பூக்கள், பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் கமராவினால் கதை சொல்லும் உத்திகளை பிரயோகித்து ரசிகர்களை ரசிக்க வைத்தன. இந்த கால கட்டத்தில் தான் கமலகாசன்,ஷோபா என்ற நடிகர்கள் தேசிய விருதுகள் பெற்றார்கள். பல அரசு பரிசுகளை பெற்ற படங்களான பாபு நந்தன் கோட்டின்,தாகம், ராஜாஜி கதையான திக்கற்ற பார்வதி, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, பாரதிராஜாவின், நிழல்கள் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் போன்றன இந்த காலத்தில் தோன்றின. இவை இலக்கிய வாதிகளின் பாராட்டையும் பெற்றன.. ஆனால் இதில் சில படங்கள் தான் ஓரளவு ஓடியது. இதன காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமா மாற்றமின்றி ஓர் தேக்க நிலையே காணப்பட்டது. இவ்வளவுத்துக்கும் மலையாள படவுலகமும் வங்களா படவுலகும் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்தன.

பின் வந்த படங்களில் வெறும் கலரையும் கமராவையும் காட்டி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்