Pages

வாசகர் வட்டம்

Monday, October 06, 2014

ஒரு சிறுகதை -அவளும் அந்த மூவரும்



தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா.

.அவனை அவசர படுத்தினார்.

இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் ,

கொஞ்சம் பொறண்ணை

இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.

அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை  இங்கு கன காலமாக செய்யிறார்  அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும்  அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன அதிர்ஸ்டமோ தெரியாது இந்த நேர அட்டவணையில் ஒன்று சேர்ந்து   வேலை செய்ய அமையமெற்று விட்டது .. இன்றைக்கும் தொடர்ந்து இரண்டு பேரும் தான் பாடி பாடி வேலை செய்ய போயினம்

.இதனால் கொள்கை பிடிப்பிலும் குணநலங்களிலும் ஓரு மாதிரி அமைந்து விட்டார்கள் போலும். இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட வட்டுக்குள்ளை போற வயது தான்.அப்படி ஒருக்கா நீங்கள் சொல்லி பார்த்தீங்கள் என்றால் அவர்களுக்கு கெட்ட கோபம் வரும்.அது மட்டுமல்ல தமிழ் தமிழ் கலாச்சாரம் பற்றி குறை சொன்னாலும் மிக மிக ரொம்ப கோபிப்பார்கள்,,,கோபம் வந்து துடிக்க அவர்களின் வார்த்தைகளையும் முகபாவங்களையும் பார்த்தீர்கள் என்றால் சிவாஜீயின் நடிப்பை ஓவர் என்று சொல்ல மாட்டீங்கள்

அது ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ..பெற்றோல் ஸ்டேசன்  என்று லண்டனில் இருப்பதினானல் மட்டும் அப்படி கூப்பிடுவதில்லை  ஊரிலையும் அப்படித்தான நாகரிகமாக சொல்லுவார்கள். இந்த பெற்றோல் நிலையம் லண்டனின் மத்திய பகுதியில் அமைந்திருக்கிறது.  ஒலிபரப்பு சேவை நிலையம் ஒளிப்பரப்பு சேவை நிலையம் பாரளுமன்றம் தூதரங்கங்களில் வேலை செய்யும் பிரபலங்கள் மற்றும் அதுக்கு வாற போற பிரபலங்கள்  எல்லாரும் இங்கு வந்து தரிசிக்காமால் ஒரு நாளும் போக மாட்டார்கள்
அதனால் என்னவோ பாடல் பெற்ற திருத்தல அந்தஸ்த்து பெற்றது போன்றதாயிற்றுது இது

லண்டனை பொறுத்தவரை   பெற்றோல் நிலைய வேலை இலங்கை தமிழரை பொறுத்த வரையில் படிச்ச ஆக்கள் என்றால் என்ன படியாத ஆட்களுக்கு என்றால் என்ன இது ஒரு பரம்பரை தொழில் மாதிரி ஆகி நீண்ட நாட்களாகி விட்டது.

பேப்பருக்குள்  தலையை கொடுத்து அதுக்குள்ளை நின்று கொண்டு பரந்தன் சந்தியில் சண்டையிட்டு கொண்டிருந்த சண்முகம்  ஏதோ அசுமாத்தமாக திரும்பி  மெல்லியகுரலில்

உங்கார்...அந்த சிவத்த பென்ஸ் காரில் போற கிழடு ...அன்றைக்கு ஒரு நாள் எங்கை போனாலும் உந்த பெற்றோல் நிலையம் வழிய எல்லாம் சிறிலங்கன் நிற்கினம் ஏன்  அப்படி என்று கேட்குது


அதுக்கு நீ என்ன சொன்னாய் என்று நமுட்டு சிரிப்புடன் மணியத்தார் வேலை தொடங்கும் படபடப்பை மறந்து

 ... பெற்றோல் நிலைய தொழில் படிக்கிறதுக்கு உலகில்  அதி சிறந்த பல்கலைகழகம் இருக்குது  சிறிலங்காவிலை தான் என்று விட்டேனே ..

.மூச்சு பேச்சிலை கதையில்லை  போட்டார்
 பெரிய நகைச்சுவையை உதிர்த்த பெருமிதத்தில் மணியத்தாரை பார்க்க

ஆனால் மணியத்தார் தன்ரை பங்குக்கு உதிலை நிக்கிறவகளிலை அந்த ஒரு மாதிரியாய் முன்னுக்கு தலையை வெட்டி ஒரு மாதிரி சிரிச்சு கதைச்சு கொண்டு நிக்குது எல்லோ
என்று சுட்டி கொண்டிருந்தவர் .

..நிறுத்தி  ஒரு செருமலின் பின்  முகம் முழுக்க கோபத்தை அப்பி கொண்டு,,,,உந்த உது ஒரு கொஞ்ச வருசங்களுக்கு முந்தி தாயின்ரை உடுப்பை ஒருகையை  முன்னும் பிடித்து கொண்டு மற்ற கையாலை லொலி பப்பை சூப்பி கொண்டு இங்கை வாறது ..
இப்ப பெரிசாயிட்டுது....போலை

அண்டைக்கு ஒரு நாள்  நான் பார்த்து கொண்டு இருக்கிறன்  என்று இல்லாமால்  ஒரு பொடியோடை நின்று கொண்டு எனக்கு சூப்பி காட்டுது ,,  வாயை வாயை ஓட்டி பல் பிடிங்கி கொண்டிருக்கினம்...கொஞ்சம் நேரம் பார்த்தன் தாங்க முடியாமால்  ஓடுங்கோ நாயளே அங்காலை நின்று செய்யுங்கோ என்று துரத்தி விட்டன்

இப்ப எங்கை என்னை  கண்டாலும் கப் சிப் என்று மணியத்தார் தொடர்ந்து கொண்டிருக்க அவன்  குறுக்கிட்டான் ...

அண்ணை கொஞ்சம் முந்தி  அவசர பட்டியள்  ,,,

இப்ப என்னை  இந்த பட்டறைக்காலை விடாமால்  உதிலை நின்று கதைத்து கொண்டிருக்கிறியள் ..என்னை இதுக்காளை விட்டு  பாரமெடுத்து கொண்டு உங்கடை கதையை தொடருங்கோவன்   ..இப்ப  பிசியும் குறைந்து விட்டது தானே  என்று சொல்ல

என்னத்தை குறையிறது  இனிமேல் தானே  உந்த பில்டிங்கில் இருந்து இறங்கி வருவினம்  சங்கதிகள்.. இந்த கடைக்குள்ளளை தூக்கிறதுக்கு  அவையோடை தடுத்து மல்லுக்கட்ட தான் நேரம் சரியாக  இருக்கும் என்றார்....மணியத்தாருக்கு என்ன ஆத்திரமென்றால்

உவங்கட பிரச்சனை இல்லாட்டி உண்மையாய் இனிமேல் பிசி குறைவு தான்  ,மணியத்தார் பட்டறையில் நின்று வழங்கல் செய்து கொண்டு அரசியல் விமர்சர்கராக இருப்பார், முகத்தார் கடையில் பண்டங்களை அடுக்கி கொண்டு இராணுவ விமர்சகராக இருப்பார் , ஒரு நாள் ஒருவர் ஒரு துறையில் இருப்பார்  மறு நாள் மற்றவர் மற்ற  துறையில் இருப்பார்.  இப்படி இப்படி மாறி மாறி இருப்பினம்

அவன் இவ்வளவு நேரமும் வழமையாக வரும் அவளை காணவில்லை என்ற வருத்தம் .வெளிக்கிடும் கடைசி நேரம் வரை நோட்டம் சுற்றி வர இருக்கும் தூரத்தில் தெரியும்  அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கு இடையால் தான் வருவது வழ்க்கம் ..அவனுக்கு மட்டும் அவளை காணவில்லை என்ற கவலை யில்லை மணியத்தாரோடை வேலை செய்யிறது காணமால் டபுள் அடித்து  தனிய இரவு வேலை செய்யப்போகும் முகத்தாருக்கும் இருக்கும் .அரசியல் சினிமா மற்றும் அடுத்தவனின் வீட்டு கதை  போன்ற விசயங்கள்   எல்லாம் சுக்கு நூறாய் அலசி ஆராய்வினம்  சில விசயங்களில் ஒரு தருக்கு ஒருதர்  அறவே காட்டி கொள்ள கூடாது தங்களோடை மட்டும் இருக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கினம் இதில் என்றும் இவர்கள் மறந்தும் தவறியதில்லை  அதில் அவளின் விசயமும் ஒன்று

இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகம் வங்காளிகள் கிழக்கு ஜரோப்பா நாட்டவர் ...இன்னும் கொஞ்சம் இருண்டால் பார்க்க வேணும் கஞ்சாவும் போதை பொருள் பாவனையும் துணைக்கு விபச்சாரமும் கொடி கட்டி பறக்கும் ..கற்பா மானமாம் கடை தெருவில் வாங்கலாம் என்ற பாட்டு இந்த கடைத்தெருவுக்கு சரியாக பொருந்தும் ..இந்த கடையில் மலிவு விற்பனை அடிக்கடி இடம் பெறுகிறதோ இல்லையோ தெரியாது ...இந்த தெருவில்இந்த நாட்டுக்கு படிக்க வரும் சில மாணவிகளினது மலிவு விலையில்  நிச்சயம் கிடைக்கும்

இவர்களை சுற்றி நடக்கும் இந்த கதைகளெல்லாம் அவனுக்கு மணியத்தாருக்கு முகத்தாருக்கு எல்லாம் தெரியுமோ என்று கேட்க மாட்டீங்கள் தானே

ஆனால் அவர் அவருக்கு இங்கை  தனி தனித்தனி கதை இருக்கு ,தங்கள் தனி கதையோடு அல்லாடுபடுறதுக்கே நேரம் போதாது ஊர் உழவாரக் கதை கேட்க நேரம் எங்கை இருக்கு

அவன் இந்த இடத்தில் வேலை செய்ய தொடங்கி கொஞ்ச காலம் தான் அவர்களிலும் பார்க்க ,அவனுக்கு இந்த கம்பனி சொல்லி கொடுத்த நுகர்வோரை கவரும் நெறிமுறைகளான கண் குடுப்பு , புன்னகை செய்தல் நன்றி சொல்லல் தவறாமால் செய்து வந்தான் .அவனது கண் குடுப்பு சில வேளை மூன்று நாலு செக்கனுக்கு மேல் நீடித்ததால் அங்கு வழமையாக வாற அன்ரிமார்  வேற மாதிரி அர்த்தம் கொண்டு இவன் மேல் விழ..

சாறி காதல் வலையில் விழ  இவன் ஏதும் பிரதிபலிக்காத ஜடம் மாதிரி நிற்க..

ச்சாய் பரதேசி என்று அவகள் மனதில் திட்டி போகும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு. ஏன் உதுகளோடை வம்பு என்று வழமையான கஸ்டமர் சேவிசு நடவடிக்கைகளை கைவிட்டே விட்டான்
அவனுக்கு உந்த விழுந்து எழும்புற விளையாட்டில் ஈடுபறது மண்டைக்குள்ளை இடமில்லை .அப்பு ஆத்தையின்ரை கடன் வந்த கடன் இங்கை கொடுத்து வரா கடன் ,எவ்வளவு உழைச்சாலும் அழியா கடன் என்று ஆயிரம் விசயங்கள் அந்த இடத்தை பிடித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கு என்று ..உதிலை வாறவளுக்கு தெரியுமா ..போறவளுக்கு தெரியுமா?

இப்படி என்று இருந்தவனை

கொஞ்ச காலமாகத்தான் அவள் இந்த இடத்துக்கு வந்து போறாள் ...நடந்து தான் வந்து போறாள் .அடுக்குமாடி குடியுருப்பு பக்கமாய் இருந்து தான் வாறாள். ஒரு பக்கம் பார்த்தால் தமிழ் பெட்டையள்  மாதிரி தான் இருக்கு . ஆனால் உந்த பங்களாதேசியள் மாதிரி வறுமை பட்ட ஆளு மாதிரி தெரியலை .அவள் நடந்து வரும் பொழுது  முன்பக்கம் உடையை மீறி எட்டி பார்த்து கடல் அலை மாதிரி எம்பி எகிறி பின் அடங்கி உள் செல்லும். அதே மாதிரி பின் பக்கமும் ஒரு சுழற்சி முறையில் மணிக்கூட்டு கம்பி வழி பக்கமுமாயும்  எதிர் புறமாயும் அசைந்து வருவதால் பார்ப்பவர்கள் எல்லாரையும் அளவெடுக்க வைக்கும். இப்படியெல்லாம் தமிழ் பெட்டையள் இருக்கமாட்டாகள் என்ற தேற்றத்தை சமன்பாடு போட்டு நிறுவினாலும் ....இவள் எப்ப எப்பவெல்லாம் வரும் பொழுதும் பார்க்கும் பொழுதும் எல்லாம் இவனது நாடி நாள்த்தில் ஒரு வித மின்சார சக்தி  ஓடி மூளையில் இவ்வளவு காலமும்  இடத்தை பிடித்த உந்த கோதாரியள் எல்லாத்தையும் இடம் தெரியாமால் பண்ணி விடும்......

அவள் எப்ப வந்தாலும் இவன் தாவு கொள்ளும் பொழுது காவு கொள்ளுற மாதிரி தான் அவளின் சிரிப்பும் உடல் மொழியும் இருக்கும்

இப்ப அவனுக்கு அவளை ஒரு நாள் காணவிட்டால் என்னோ மாதிரி இருக்கும் உடம்பும் மனமும்

மணியத்தாரின் உடுப்பையும் தோற்றத்தை பார்த்தால் பஞ்ச பரதேசி மாதிரி தான் இருக்கும் .மனேஜர் குஜாராத்தி என்பதால் அவனுக்கு இவற்றை நயம் நட்டத்தில் அக்கறை படமால் இருக்க விடுறது இருக்கட்டும் ,நாளும் பொழுது புழங்கி இவரோடை  ஊர் நியாயம் பார்க்கும் சண்முகத்தாருக்கு கூட இவரின் நதி மூலம் ரிசி மூலம் தெரியாது என்றால் பாருங்களேன்....தெரியவும் அவர் விடுவதில்லை....ஏன் பெற்றோல் நிலையத்தில் செய்யும் தில்லு முல்லுகள் கூட

மணியத்தாருக்கு பெற்றோர் நிலையத்தில் வேலை செய்யும் நேரத்தை தவிர்த்து பார்த்தால் அதுவும் அவரின் குடும்ப மற்றும் நண்பர்களின் வைபவத்தில் அவரா இவர் என்று அதிசய வைக்கும் ,,உங்களுக்கு தெரிந்தாலென்ன குறைந்தா போயிட போறார் ,,,இரண்டு மூன்று வீடும் லண்டனில்  மச்சான் நடத்தும் கடையும் லிவப்பூலில் தம்பிக்காரன் நடத்திற பெற்றோல் நிலையமும் இவற்றை தானாம் ,,,,என்ற ரகசியம் இவற்றை ஊரவைக்கு கூட தெரியாது

இவருக்கு இந்த பொன் முட்டை இடுற வாத்து இந்த பெற்றோல் நிலையம் தான் அதுக்கு உதவுகிற சுற்றியிருக்கிற கட்டிடத்தில் வசிக்கும் அன்றாடம் காய்ச்சிகள் தான் .இவர்களை மற்றவர்கள் முன் வெறுப்பது சும்மா காட்டி கொள்ளுவார் ....இவர்களில்லை என்றால் இவரின் முதலுக்கே மோசம்  ...மட்டைகளை களவெடுத்து இவருக்கு சப்ளை செய்பவர்கள் இவர்களே

சுருக்கமாக சொல்லுவதனால் இங்கு இவருடைய உப தொழில் மட்டை போடுவது

மதுரையில் மண் சுமக்க வந்த சிவபிரானுக்கு பட்ட அடி

உலகில் உள்ள சீவராசிகள் அனைவருக்கும் பட்ட அடியாக மாறினது போல


செப்டம்பர் ஒன்பது பதின்னொறில் நீயூயோர்க்கில் விழுந்த அடி

லண்டனில் அங்கை இங்கை என எங்கெல்லாம் அடி விழந்த மாதிரி தெரிய


உலக ஒழுங்கு   மாற

இந்த பெற்றோல் நிலைய நடை முறை மாற

கம்பியூட்டரெல்லாம் மேம்படுத்தபட

அந்த இந்த இயந்திரங்கள் எல்லாம் புதிய வடிவத்தில் மாற

முன்னாலுள்ள தெருவில்லாம் மூன்று எழுத்துகள் உலாவ

மணியத்தாரின் வாத்து பொன் முட்டை இட கஸ்டப்பட

இந்த தொழிலை கைவிடாமால் மேம்படுத்த ஏதாவுது முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்துக்க வேண்டி வந்தது

முன்பு மாதிரி இல்லாவிட்டாலும்

 மசிரை  விட்டான் சிங்கன் .

.அப்பப்ப உதை எல்லாம் உச்சி போடடு ஏதோ வகையில் உப தொழில் தொடர்ந்தது  இந்த அடுக்கு மாடி குடியுருப்பில் இருந்து வரும் இவரது கைப்புள்ளைகளில் ஒருவரால்  புதிதாக அறிமுக படுத்த பட்டு இருப்பவள்  தான் அவள்

இந்த விசயத்தில் இவளின் தொழில் நுட்ப ஆலோசனை இவரை மெய்சிலிர்க்க வைக்கும்
எந்த கைப்புள்ளையை கூட ஒரு நாள் காணாமால் இருந்தால் கவலை பட மாட்டார்

இந்த புள்ளையை காணவிட்டால் .

ஒரு கை ஒடிந்த மாதிரி இருக்கும்

இவருக்கு இன்று முழுவதும் காணவில்லை என்ற கவலை


சண்முகத்தாருக்கு காசு பண்டம் சொத்து சேர்ப்பு அது இது என்று பெரிதாக ஆசையில்லா மனிசன். .இருக்கும் வரையும் எல்லாத்தையும் ரசித்து அணு அணுவாக ரசித்து வாழ வேணும் என்ற நம்பிக்கையுடையவர்.  உணவு விசயத்தில்லை சரி , குடி விசயத்திலை சரி  பொம்பளை விசயத்திலை  சரி  ..ஏன் சொல்லப்போனால்  ஊரிலை நடக்கிற சண்டை யை கூட அப்படித்தான் ரசிப்பார்

அவரே நம்புகிறார்  மற்ற ஆட்களிலும்  பார்க்க ஓப்பிட்டளவில் தனக்கு  கொஞ்சம் ஓமோன் சுரப்பு கூட என்று .....ஒரு பருவ வயதில் சந்ந்தி ,நல்லூர் திருவிழா கூட்டத்தில் சந்தர்ப்பம் தேடியதில் தொடங்கி பக்கத்து வீட்டில்  ஓட்டை கழட்டி இறங்கி சில்மிசம் செய்தது ,பாவட்ட பட்டைகள் சூழ இருக்க நடத்திய இரகசியங்கள்   மட்டுமன்றி இந்த வயதில் இப்பவும்இந்த வயதிலும் நடத்தி கொண்டிருக்கிற  திருவிளையாடல்கள் கூட தனது உடம்பு  கொஞ்சம் அதிகம்  கேட்குது   என்று .சிலவேளை வந்து குழப்பும் மனசாட்சிக்கு கூறி கொள்ளவார்

உதே  மாதிரி தான் மணியத்தாரும் மனசாட்சி வந்து குழப்பு பொழுது  கூறி கொள்ளுவார்.மட்டை போடுறதாலை உந்த மல்டி நசனல் கொம்பனி காரன் குறைய போறானே  போதாக்குறைக்கு அலஸ்காவில் பெற்றோல் கிண்டுறான் , தென்னாபிரிக்கா விலை சுரண்டுறான் ,,,,நாங்கள் அடிக்கிறது எல்லாம் இவங்களுக்கு பீ நட் (peanut) என்று சொல்லி குற்றவுணர்ச்சி ஏற்படும் போது எல்லாம் சொல்லி கொள்ளுவார்

முகத்தார் கஞ்சா பெட்டையள் ,அதுக்கு அலையும் அன்ரி மார் அந்த நாட்டுக்காரி இந்த நாட்டுக்காரி எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும்  அகப்பட்டால் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டார் .அதுக்கு தேவையான பஞ்சணையை இந்த கடையின் ஸ்டோர் றூமை ஆட்கி கொள்வது வழக்கம் ..அண்மையில் புதிதாக கடையில் வந்து போகும் அவனுக்கும்  மணியத்தாருக்கும் பழக்கமான அவளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பது ஒருதர் ஒருதருக்கு தெரியாது ...

அண்டைக்கு ஒரு நாள் முகத்தார் பகிடியாய் ஒரு ரெசப்பி சொல்லக்கை  அவனும் இருந்தவன் மணித்தியாரும் இருந்தவர் .அவன்தான் அக்கறையாய் கேட்டான்.மணித்தார் அதை கணக்கு கூட எடுக்கவில்லை.

வாட்டர்மெலனை அந்த சிவத்த பகுதியை உள்ளுக்காலை எல்லாத்தையும் வழிச்சு  ஒரு கிறைன்டரில் போடவேணும் என்று சொல்லக்கை வலப்பக்க வாயை ஒருபக்கமாக வைச்சு கொண்டு சொன்னார் . கை அளவு றெட் பெரி பழத்தையும் கொஞ்சம் சேர்க்கோணும் என்று சொல்லக்கை கையை ஒரு மாதிரி காட்டினார் .பிறகு பச்சை எலும்பிச்சபழத்தையும் சிவத்த எலிமிச்சபழத்தையும் புளிஞ்சு அதோடை சேர்க்கவேணுமென்று அப்பவும் கையை ஒரு விதமாக அசைத்து ஒரு நமிட்டு சிரிப்புடன் கூறினார்  .உதெல்லாம் சேர்த்து அடிச்சப்போட்டு  ஒரு கப்பிலை விட்ட குடித்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு உங்களுடைய உடம்பு உங்களுக்கு என்ன் சொல்லும் என்று  அப்படி செய்து குடித்து பார்த்துட்டு  அதை கேளுங்கோ ....என்றார்

அதோடை திரும்பி அவனை பார்த்து சொன்னார் உன்னிலும் பார்க்க  மணியத்தாருக்கு தான் உது அதிகம் உதவும்  உந்த நாள் கவனிக்குது இல்லையே என்று கூறும் பொழுது உந்த ரெசிபியில் அவனுக்கு  ஹெல்த் சம்பந்த விசயமில்லை டவுட் இருந்து கொண்டே இருந்த்து

இது மற்றவர்களுக்கு இது ஒரு வகையான ரெசபி

ஆனால் முகத்தாரை  பொறுத்த மட்டில் இயற்கை வயகரா

இதை எல்லாம் இந்த கடையிலை செய்யிறதுக்கு இதிலை இருக்கிற சிசிடிவி கமராவை உச்சி தானே செய்யவேணும் ...செய்யிறார் தானே

இதை மாதிரி மணியத்தாரும் இந்த சிசிடிவி கமராவை எல்லாத்தையும் உச்சி போட்டு தானே மட்டை போட வேண்டும் ...ஏதோ எப்படியோ செய்யிறார் தானே....

சிசிடிவி எத்தனை புறத்தாலே சுழட்டினாலும்  பலன்  கிடைக்கலை .மேலே இருந்து ஒரே பிறசர் ...கண்டு பிடி கண்டுபிடி ...மனோஜர் என்ன செய்வான் ...கார் ஒன்றும் நில்லாத போது பரிமாற்றம் நடக்குது ..பரிமாற்றம் நடக்கும் பொழுது  அங்கு கார் இல்லாமால் இருக்கு ....கம்பனிக்காரன் அனுப்பின தொழில் நுட்பக்காரனும் உதுக்குள்ளை எல்லாம் கிண்டி கிளறி பார்த்தாலும் ஏதோ செய்யினம் அதை நிறுவ முடியாமால் மண்டையை பிசைந்து கொண்டு கண்டு பிடிக்கிறன் கண்டு பிடிக்கிறன் என்று காலத்தை இழுத்தடித்து கொண்டு இருந்தார்...கொம்பனிக்காரனுக்கு இந்த விசய்த்தை வெளியில் விட மனமில்லை ......தன்ரை உலகலாவிய பெயர் கெட்டு போகும் என்று

அன்று ஒரு நாள்  அவளின் வருகையின் நோக்கத்தை அறியாமால் முகத்தார் ஏதோ புளகாங்கிகத்தில் இருக்க உளற ...அதே டெக்கனிக்கை தான் மணியத்தாரும் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது..
கொம்பனிக்காரன்  அதிசயம்  எப்படியெல்லாம் நுணுக்கமாய் இவையளால் செய்ய முடிந்த்து என்று .

அதே போல்
இருவருக்கும் அதிசயம் ஒரே டெக்கனிக்கை  ஒருதர் ஒருதருக்கு தெரியாமல் வெவ்வேறு நோக்கத்து செய்திருக்கிறமன்று  ...

அவள்  ஒரு மூன்றெழுத்து .அவளின் முன்னோர்கள் பிஜி நாட்டவர்கள் ...ஆனால் அவள் தமிழச்சி என்றே சொல்லுகிறாள் ..ஆனால் வடிவாய் கதைக்க மாட்டாள் ..நன்றாய் விளங்க கூடியாதாய் இருக்கிறாள்

ஒரு தனியார் உளவு ஸ்தாபானாத்தால்  அனுப்ப பட்டவள் ..எல்லாம் விசாரணையில் போல் தெரிய வந்தது


மணியத்தாருக்கு முகத்தார் செய்த முட்டாள் தனத்துக்கு கட்டி வைத்து  கீழை காவோலையால் கொழுத்த வேணும் போல் இருந்த்து ...அவர் பாண்டிச்சேரியில் கிட்ட்டியில் வாங்க இருந்த விருந்தினர் விடுதி ,,ஊரிலை கட்ட இருந்த கட்டிட தொகுதியெல்லாம் கண் முன்னே வெடித்து சிதறியது  ..என்றாலும் மணியத்தார்.உந்த சஸ்பண்ட் ஒன்று செய்யாது  முகத்தாரும் கூட தனக்கும ஒன்றும் செய்யாது நினைக்கிறார் உந்த ரெசப்பி கைவசம்  இருக்கும் வரை ....
அவனுக்கு  கொம்பனி நடை முறையில் உள்ள கஸ்டமர் சேவிசை ஒழுங்காக செய்ய சொல்லி  ஒரு எச்சரிகை வழங்கி வேலை தொடர விட்டிருந்தது

அன்று ஒரு பிசியான நாள் ...யந்திரம் மாதிரி வேலை செய்து கொண்டிருந்தவன் கண்ணில் கியூவில் மூன்றாவதாக ஒருவள் .எங்கையோ பார்த்த முகம் என்று நினைக்கும் முன்பே அவள் என உதிக்க ...மீண்டும் வேண்டமாட என்று தன்னை சுதாகரித்து கொண்டு கடமையை கண் வர செய்ய
அதே பார்வை அதே குழைவு அதே நளினம் .இருந்தாலும்.இது நடிப்பில்லை என்று தோற்றமளிக்க ..அவனிடம் உங்கள் மொபைல் நம்பரை தாருங்கள். கே ட்டு வேண்டி சென்றாள்

இது உண்மையாய் இருந்தால் கூட எந்த வித மின்சார அதிர்ச்சியும் இவனுக்கு ஏற்படவில்லை ..அந்த தெளிவு நிதானம் அவனுக்கு தெம்பாக இருந்த்து ..எந்த சோலியும் சுரட்டும் வேண்டாம் என ...நினைத்தவனை

அவனது இன்னொரு நினைப்பு வந்து கூறியது ...அவள் மொபைல் நம்பர் வேண்டியண்டு போறாள் சில வேளை அடித்தால்

ச்சாய்  முகத்தார் சொன்ன ரெசப்பியை அன்றைக்கு வடிவாய் கேட்டிருக்கலாம் என்று பட்டது

(இந்த சிறுகதை மிதுவின் வலைபதிவுக்காக என்னால் எழுதப்பட்டது)

Friday, August 29, 2014

புதுமைபித்தன் எழுதிய விநாயக சதுர்த்தி என்னும் சிறுகதை (1936 ஆண்டளவில்)

புதுமைபித்தன் 1936ஆம் ஆண்டளவில் மணிக்கொடி என்ற சஞ்சிகைக்கு எழுதிய கதை விநாயகசதுர்த்தி





அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின.
     நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்...

     பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை, நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

     என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும்.

     "உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது.

     "'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன்.

     "ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது.

     ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன்.

     "அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும்.

     அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின.

     "ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி.

     "கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன்.

     "கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி.

     "திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன்.

     பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர்.

     "சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.

     "அதென்ன?"

     "கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே. நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே, அங்கே தான்கும்பினியான் சரக்குகளைப் பிடித்துப்போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும் - இந்தப் பத்தமடைப் பாய் இருக்கே அது - ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். 'குஷ்டந் தீர்ந்த துறை, என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!"

     "இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமோ என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி.

     "இதெல்லாம் உன் 'டிபார்ட்மெண்டு'. என்னைக் கேட்டால்...?" என்று சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.

     "என்னைக்குமா உங்களைக் கேக்கறேன்? ஏதோ கேட்டால்..."

     அவள் காலையில் ஸ்நானம் செய்து தலையில் ஈரங்காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் விபூதி, அதற்குமேல் குங்குமம்... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை... வேகத்திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன்.

     "ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன்.

     "ஆமாம், அடுப்பிலே பாகு என்னமோ காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள். 

     அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்பலில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது.

     வெளியே வெய்யில் ஏற ஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா?

     "அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப்பாதைதான்.

     "இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக்கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொழுது உடன்காடு...(உடை மரம் - கருவேல மரம்)
     "அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக் குடுமியும் பூணூலும் இருந்தாலும் முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக் காலமாக பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியாபிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா, சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே இப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி... ஆனால், நாலு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாது... எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும் 'அடியாத மாடு படியாது' என்பது வேளாரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும்படி நடந்து கொண்டான் என்றால் பயல் எவ்வளவு துடியாக இருந்திருக்க வேண்டும்!

     "சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளையாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந்தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார்.

     "'என்ன வே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஓடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச் சொல், 'வேய்' ஆகி, பின் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது; 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் சரி, அவர் தென்பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

     "என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே. சக்கரத்துக்கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த்தேன்... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டு விட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?... வீடு முழுக்கவும் ஒரு நாளைக்குப் பார்த்தா, யானையும் குதிரையுமா பண்ணிப் போட்டுவிடுவான்... 'இதெல்லாம் சுட்டுக் கொண்டா. வர்ணம் பூசித்தாரேன். கொலுவுச் சாமானா விக்கலாண்டா!' இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி, மறுபடியும் வெறும் களிமண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மா வாவது வீட்டோ ட கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார்.

     "'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை.

     "'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர்.

     "'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..."

     "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி.

     "அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான்.

     "மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள்.

     அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்...

     "சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு.

     "அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம்.

     "உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம்.

     "ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள்.

     "இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார்.

     "ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான்.

     "ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்...

     "இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன.
     "கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்...

     "அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார்.

     "ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை...

     "ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு.

     "அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.

     "'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு.

     "அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்; கேட்கவா வேண்டும்!

     "முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்டமில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், காசு கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்துவிட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார்களில் ஒன்றைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்திருந்தாள்.

     "சுப்பு குளித்துவிட்டு வந்தான். வீட்டில் நடந்த கதை தெரிந்தது...

     "'இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல் அவன் நேரே வெளியே சென்றான்.

     "அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ் திடுக்கிட்டார். ஆனால், சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள். இவன், பிள்ளையாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினதினால் பேச்சிக் கசத்தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டினால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்பட வேண்டியதுதான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்துவிட்டான். அவன் அப்புறம் வெளிவரவே இல்லை.

     "வலை கூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை!"

     அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன. 

     என் மனைவி, நின்று, கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம் அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார் கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்றுபட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை!

     அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

     "அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்... கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத் தின்று உயிரைவிடும்!..." என்றது மனசு!

     "இதையும் நம்ப வேண்டுமா?" என்றேன்.

     "இது முழுப் பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்...?"

     "ஆக்கு..!"

     "வெயிலாகிறதே. எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா! என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் மனைவி.

     "ஒரு கதை!" என்றேன் நான்.

     "உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு இலைகளைப் போட்டாள்.

     "நிஜமாக!" என்றேன்.

     "நாங்கள் நம்புகிறதிலெல்லாம்

Friday, January 10, 2014

பிள்ளை பிடிகாரர்




இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும்  எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு

.பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு உண்மையாகவே பிள்ளை பிடிகாரர் உலவாகினமாம் என்ற செய்தி காற்றில் அடிபட வயிற்றில் புளியை கரைத்தது.

எந்தந்த மனிதர்களை பிள்ளை பிடிகாரர் என்று சொல்லி வெருட்டினார்களோ அவர்களை மட்டுமன்றி போற வாற கந்தன் சுப்பன் கடம்பன்  எல்லாரையும் சந்தேகித்தார்கள்.மாய மனிதன் ,பேய்  மனிதன் உலாவுகிறார்கள் என்ற மாதிரி தான் பிள்ளை பிடிகாரர் என்ற  செய்தியா உலவா தொடங்கியது. ஏனெனில் கண்டவர் விண்டிலர்  விண்டிலர் கண்டவர் என்ற மாதிரி ஒருதர் கூட சரியான விபரங்கள் உறுதி படுத்தியவர்கள் இல்லை.ஆனால் இந்த கதை


ஊதி பெருத்து அந்த கிராமத்தில் ஒரு பட படப்பை  உருவாக்கி இருந்து . இந்த மனிதர்களின் படபடப்பு  வீட்டு பிராணிகள்  தொற்றி இருக்கலாமோ என்னமோ சம்பந்த மில்லாத நாய்களின் குரைப்பும் இனம் தெரியாத பறவைகளின் அலறல் சத்தமும்  உறுதி படுத்தின. இந்த சில தான் தோன்றிதன மான  சில உண்மைகள் கதை கட்டுமான பணிகள் கிடைக்காமால் ஏங்கும் சிலருக்கு  இது அவல் மாதிரி  கிடைத்தமையால் ...நல்லாய் மென்று என்னவென்று தெரியாத உணர முடியாத ஒரு பய பீதியை உருவாக்கி  விட்டிருந்தார்கள் . ஆடு  மாடு தான் இருள முந்தி  கட்டு போகும் நிலமை இல்லாமால் ..சிறு பிள்ளைகளுக்கு  உள்ள பிரச்சனை என்று போய்  வயது வந்த பெரிசு இளசு குமரு குஞ்சுகள் கூட இருள முன் வேளைக்கே வீட்டுக்குள் இரட்டை பாடு தாள் போட்டு வீட்டுக்குள்  அடங்கி விடுவார்கள்.இந்த மாயன அமைதியே பயத்தை  ஒரு வித கிலியை பல மடங்காக்கி விட்டிருந்தது.

தண்டால் போட்டு உருட்டு கட்டை சுழட்டி சராசரிக்கு மேல் உண்டு  உறங்கி வடகத்தைய காளை மாடு போல் திரண்டு இருக்கும் அவ்வூர்  இளைஞர்கள் விரும்பியோ விரும்பமாலோ களத்தில் இறக்க பட்டார்கள், வெறும்  உடம்பை காட்டி  தங்கள் வனப்பை எதிர்ப்பாலாரை கவரும் தொழிலை மட்டுமே செய்தவர்கள் களத்தில் நிற்க மிகவும் கஸ்டப்பட்டார்கள் . .  இந்த தொழிலை செய்ய  திணித்த ஊர் பெரிசு களின் மேல்  உள்ள ஆத்திரத்தை சும்மா போற வாற நோஞ்சான்  நொடுக்கு பேர்வழிகளில் காட்டினார்கள்.பிள்ளை பிடிகாரரின் ஆயுதமாக  மயக்க மருந்து புகை கருவி பாவிப்பதாக செய்தி ஊடகங்கள் எழுதி குவித்தது .இது தங்கள் மீதும் பிரயோகிக்க பட்டு விடுமோ என்று அஞ்சி சில இளைஞர்கள் பின் வாங்கினார்கள் .இதை பெரிசுகள் மட்டும் கேலி செய்யவில்லை . ஒரு கண் வைத்திருந்த பெண் புரசுகள் இவர்களது இவ்வளவு தானா என்று குசு குசுக்க தொடங்கி விட்டார்கள்.இந்த இடையை பாவித்து நடுத்தர பெரிசுகள் தங்களின் அந்த கால வீர பிரதாபங்களையும் தான தண்டத்தையும் பிரகடன படுத்த தொடங்கி விட்டார்கள்

றோட்டாலை பள்ளி கூட்டி கொண்டு போகாமால் தோட்டம் ,துரவு,காணி பூமிக்கால் உள் பாதையூடாக அனுப்பினார்கள் . அப்படி இருந்தும்  உண்மையில் எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் காணாமால் போனான் . அப்பவும் அது பிள்ளை பிடிகாரன் பிடித்து கொண்டு போகவில்லை பெற்றோரின் கொடுமை தாங்காமால ஓடி போட்டான் என்று  பள்ளி கூட தரப்பு ஒரு கதை கூறியது. அது சில வேளை உண்மையாக இருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள் . அவன் எப்பாவது பள்ளிக்கு வருவான் .வந்தாலும் ஆசிரியர்களின் அரியண்டம் தாங்காமால் பாதி நாள் பள்ளியிலையே காண கிடைக்காது.எனக்கென்னவோ அவனில் இனம் தெரியாத விருப்பம் .அவனுக்கும் என்னில் அப்படியே...காலம் அதிக காலம்  அவனது  கதையை அமுக்க முடியவில்லை....புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளுக்கு  அண்மையில்  உள்ள மீன்பிடி தீவுகளை சுற்றி வளைத்த பொலிசார்  பல சிறார்களை மீட்டார்கள் என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் உலாவியது . செய்தி ஊடகங்கள்  சிறார்களின் பெற்ற  அனுபவ கதை என வித விதமாக எழுதியது . பள்ளியில் யார் என்று தெரியாத நிலை மாறி எல்லாருக்கும் தெரிந்த  ஒருவனாக வந்த பொழுது  அவனிடமே கதையை கேட்டேன்

தன்னை நாலுபேர் வந்து கைகுட்டை ஒன்றினால் தனது முகத்தில் மூடிய பின் தான் மயங்கி விட்டேன் என்றும் அதன் பின்  ஒரு கடற்கரை பிரதேசத்தில்   ஒன்றில் சட்டரீதியற்ற தொழில் செய்யும் இடத்தில் தொழில் செய்ய அமர்த்த பட்டதாகவும் .. பின் அங்குள்ளவர் கள் சொல்ல கேள்விபட்டதாகவும்  ஒவ்வொரு மாதமும்  இரு சிறுவர்களை   நரபலி க்கு பயன் படுத்துவார்களாம்  புதையல் எடுப்பதற்க்கு .என்று..தனது முறை வரும் முன்பு காப்பற்றப்பட்டதாக் கூறினான் . சொல்லும் பொழுது உயிர் தப்பிய சந்தோசம் அவன் கண்ணில் மிளிர என்  கண்ணிலும் தெறித்த்து.

அதன் பின்  பல பல வருடங்கள் கழிந்து பின் எதேச்சையாக அவனை  சந்தித்தேன்  ஒரு முட்டு சந்தில். நானும் இளைஞனாக அவனும் இளைஞனாக ..அவன் முன்பு போல சோம்பியவன் மாதிரி இல்லாமால் ஒரு கட்டு மஸ்த்தானவனாக இருந்தான் ... சந்தித்த கால கட்டத்து நடக்கும் விசயம் ஒன்றுக்காக அப்பிரதேசத்து தலைமை  ஆள் பிடிகாரனாக இருந்தான் . இரண்டு நாடுகளின் வாய்க்கால்  வரப்பு சண்டைக்காக  இந்த ஆள் பிடிப்பு வேலைக்கு தூண்டி  விட்டது வலுவான நாடு ...என்ன மயக்க மருந்து கொடுக்காமால்  ஒரு மயக்க உணர்ச்சி கோசத்தை வைத்து ...அவன் என்னிடமும் அரசியல் பேச முற்பட்டான் . அரசியல் எனக்கு  எப்பவும் பிடிக்காது  அரசியலும் தெரியவே  தெரியாது (சிலர் நமுட்டு சிரித்தால்  அதற்கு நான் பொறுப்பில்லை)..அதனால் அவனையே கதைக்க விட்டேன் எந்த குறுக்கீடில்லாமால்

எல்லாம் முடிந்து அவன் என்னிடமிருந்து விடை பெறும் பொழுது என்னிடமிருந்து ஒன்று மட்டும் தான் அவனிடம் சொல்ல வேணும் மாதிரி இருந்தது .ஆனால் அப்பொழுது  சொல்லவில்லை

யாருக்கோ கிடைக்க போகும் புதையலுக்கு நீ நரபலியாவதிலுமிருந்து தப்பி விட்டாய்

ஆனால்  இப்ப வேற வடிவத்தில்  யாருடையோ தேவைக்காக மீண்டும்  மாட்டி கொண்டாய் நீ ...என்று


...

Saturday, January 04, 2014

நாடு காத்த சிறுவன்

அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான்

.வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று.

இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன்.

அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்டின் வட பகுதியில் உள்ள புகழ் பெற்ற பீச்சுக்கு அண்மையில் அமைந்துள்ளது.இங்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கூட பெருவாரியாக உல்லாச பிரயாணிகள் வருவதுண்டு.


இந்த பீச்சுகளில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக படுத்து சூரிய குளிப்பு செய்வதுண்டு. அதுவும் நம்மவர்கள் அண்மையில் தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அத்துடன் பகலில் நிர்வாணம் என்றதை நேரில் காணதாவர்கள். ஏன் இரவில் கூட காணாதாவர்கள்..காண கூச்சமாக இருந்தவர்கள்..அவர்களுக்கு எந்த மனத்தடை சமூக தடை இல்லாமால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தமையால் கூட்டம் கூட்டமாக அந்த கடற்க்கரைக்கு புளு பிலிம் ஓசியில் பார்க்க கிடைத்த மாதிரி இளையவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை திரிய தொடங்கி விட்டார்கள்.

அதற்க்கு தலைமை தாங்கி வழி நடத்துபவன் உந்த மோகன் தான் . ..உல்லாச பிரயாணிகளுக்கு இடையூறாகவும் அசெளகரியமாகவும் இருக்கு என நகர சபையினருக்கு செய்தி போக பின்.அகதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது

.அதனால் உவன் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து ஊர் உலகம் காட்டி செய்தி சொன்னால் எப்பவும் எச்சரிக்கையாகவே இருப்பதுண்டு.

என்றாலும் அவன் கூறிய வார்த்தைகள் ....அவன் சொல்வதை திரும்பி பார்க்க வைத்தன.

மச்சான்..நாடு காத்த சிறுவனின் தூபியை பார்த்தேன் கடற்க்கரையிலை வா காட்டுறன் என்றான்.

நாடு காத்த சிறுவன் பற்றி அந்த காலத்தில் எங்களுடைய நாலாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் போட்டு கதை சொல்லி இருப்பார்கள்..

இது தான் அந்த கதை

ஒல்லாந்து(ஹாலந்து) தேசம் கடல் மட்டத்திற்க்கு கீழே அமைந்த தேசம்.அதனால் நாடு சூழ கடல் தண்ணீர் உள்ளை போகமால் இருப்பதற்கு அணை கட்டி இருக்கிறது. ஒரு முறை கடற்க்கரை ஓரமாக ஒரு சிறுவன் நடந்து சென்று இருக்கும் போது அணையில் இருந்து ஒரு துவார வெடிப்பூனூடக கடல் தண்ணீர் உள் புகுவதை கண்டான்,.அந்த துவாரத்தை தன் கையால் பொத்தி கொண்டு அந்த குளிரிலும் இரவு முழுக்க இருந்தானாம் .விடிய ஊரவர்கள் கண்டு ஆவன செய்தார்களாம்.அவன் அப்படி தண்ணீர் வடிவதை தடுக்காவிடில் நாடு அழிந்திருக்குமாம்..அதனால் நாடு காத்த சிறுவன் என்று சொல்லி கெளரவித்தார்களாம்.

சின்ன வயதில் கேட்ட கதை என்றாலும் உருவக கதை என்று தான் என்னுள் இருந்தது.என்றாலும் நாடும் இடமும் கதையும் இவ்வளவு அண்மையில் இருக்கும் போது சரி பார்ப்போமே என்று கிளம்பினேன்.

வெளியில் கார் தரிப்பிடத்தில் ..கார்களில் இருந்து இறங்குபவர்களும் கார்களில் ஏறுபவர்களுமாக இருந்தார்கள் ..இங்கு இந்த அகதி முகாமில் சிலர் சில நேரம் தான் இருப்பார்கள் .மற்ற நேரங்களில் ஒரு நாள் ஜெர்மனி மற்ற நாள் பெல்ஜியம் அடுத்த நாள் பாரிஸ் என்று வாழும் நாடோடிப் பிராணிகள் ...

அவர்களுக்கு நாடு கடக்க சரியான அனுமதி இல்லாவிடினும் அந்த அந்த நாடுகளின் எல்லை வேலிகளின் துளைகளை கண்டு அதனூடாக கள்ள வேலி பாய்ந்து இலகுவாக சென்று வருவதில் சூரர்கள்.இவர்களுடன் சில சமயங்களில் காரில் உந்த கள்ள வேலி கடந்து பெல்ஜியம் ஜெர்மன் என்று சென்று வந்திருக்கிறேன்...

அப்படி செல்லும் போது மற்ற பக்கத்தினால் ஏதோ நோக்கத்துக்காக எங்கோ சென்று கொண்டிருக்கின்ற பொலிஸ் காரை பார்க்கும் போது கூட எல்லாம் என்னைத்தான் பிடிக்க வாறான் என்று நினைத்து அடி வயித்தை கலக்கும்..

நம்மவர்கள் ஜரோப்பாவின் பெருநிலத்தில் கள்ள வேலி தாண்டி இலகுவாக போய் வந்தாலும் உந்த ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு செல்வது ஒரு போதும் வாய்ப்பாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் மதீனா மக்காவுக்கு ஒரு முறையாவாது போய்விடும் நினைப்பில் இருப்பது போல் இங்கு இருக்கும் பலருக்கு உந்த லண்டனுக்கு போற நினைப்பும் இருப்பதுண்டு

வாசலை தாண்டி றோட்டுக்கு இறங்கும் போது என்னை பெயர் சொல்லி அழைத்த மாதிரி ஒரு அசரீரி குரல் கேட்டது..

சுரேஸ் தான் ..அண்மையில் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்தது .அது கிடைத்த தாமதமே லண்டன் போய்ட்டு வந்திருக்கிக்கிறான் ....என்னை காண வந்திருக்கிறான்....எங்களுடைய திட்டத்தை மாற்றி கொண்டு அவன் நான் இவன் மோகனுமாக அந்த பரந்த பூந்தோட்டத்தத்திலுள்ள மூலையிலுள்ள ஒரு பாருக்குள் பிரவேசித்து கொண்டோம்...எங்கள் பிரவேசத்தை வரவேற்பது மாதிரி அங்கு இசை ஒலித்து கொண்டிருந்தது.பாரில் அவ்வளவு கூட்டமில்லை மூலையில் ஒரு இளம் ஜோடி ஒன்று ஜிகு ஜிகு மூட்டி கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் தள்ளி நடுத்தர வயது தாண்டிய ஜோடி ஒன்று பழைய முத்தங்களை நினைத்து கொண்டு புதிய முத்தங்களை சொரிந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் செல்ல டச்சு கமக்காரர்களினால் இந்த பார் நிறைந்து விடும்

நாங்கள் எங்கள் மொழியை ராகத்துடன் கதைக்க கூடிய இடமாக பார்த்து மூலையான இடமாக தேர்ந்து எடுத்த கொண்டோம்

நான் தான் கதையை தொடக்கினேன்

என்ன மச்சான் ..லண்டன் போய் வந்திருக்கிறாய் இனிமேல் உனக்கு என்ன சேர் பட்டம் கிடைத்த மாதிரி தான் என்றேன்

ச்சாய்..என்னடா லண்டன் என்று அலுத்து கொண்டான்

அவனது அலுப்பை ஏமாற்றத்தை போல் ஒன்றை 70 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இருக்கும் போதே பெற்றிருக்கிறேன். எனது வகுப்பு தோழன் ஒருவன் பல்கலைகழக அனுமதி கிடைத்து அது தொடங்க இருக்கும் ஒரு வருட இடைவெளியில் லண்டன் சென்று வந்திருந்தான்...அவனிடம் கேட்ட போது அவன் சொன்னது நினைவில் வந்தது


ஒல்லாந்து (ஹாலந்து) நாட்டு சிறுவன் ஒருவன் (இது இன்னோரு சிறுவன்) லண்டன் தெருக்கள் எல்லாம் தங்கத்தால் செய்ய பட்டது என்று கற்பனை செய்து பின் போய் பார்த்து ஏமாந்த கதை முந்தி வாசித்திருக்கிறேன் .அதே மாதிரி தான் எனக்கு ஏற்பட்டது என்றான்

சுரேஸ் இரண்டாவது ஆட்டத்துக்கு வந்து விட்டான். நான் இன்னும் எனது முதலாவது ஆட்டத்தை முடிக்கவில்லை..எனக்கு முதலாவது கிளாஸ் உள் போகும் வரை எனது முகம் பல அஸ்ட கோண வடிவத்தில் இருக்கும்.ஏன்டா கஸ்டப்பட்டு இப்படி இவன் தண்ணி அடிக்கோணும் முன்னுக்கு இருப்பவர்களை யோசிக்க வைக்கும்.

சுரேஸ் அப்படி இல்லை நிதானமாக குடிப்பான் நிதானமாக கதைப்பான் ஏற ஏற சுவராசியமாக கதைப்பான் ..நானும் இரண்டாவது வந்து விட்டன் என்றால் குசியாகி விடுவேன் நிதானமாக குடிப்பேன். நான் கேள்வி கேள்வி மேல் கேட்டு கதையை பம்பல் ஆக்குவேன் அவனுடன் இப்படியான தருணத்தில் கதைப்பதில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அவனுக்கு நன்கு தெரியும்
.
அதனால் கதைக்க தொடங்கி விட்டான்..இனிமேல் லண்டன் புராணம் தான் என்று விளங்கி விட்டது ..இவன் மோகன் எங்களின் கதை பேச்சுகளில் அக்கறையின்றி கலை நயத்துடன் அங்கினை இங்கினை பிராக்கு பார்த்து கொண்டிருந்தான்.

லண்டனை விட நம்ம லண்டன் வாழ் தமிழர்களின் கதை சுவராசியமானது என்று தொடங்கினவன் நிற்பாட்டவே இல்லை.

வரவேற்பறையை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வாடகைக்கு விட்டு விட்டு வருபவர்களை வரவேற்க்க காத்திருக்காதவர்கள்..இவர்கள்
.
இவர்களின் சிரிப்பை இவர்கள் தொலைத்து மறந்து நெடுநாளாகி விட்டது . இந்த நாட்டிலை இங்கு பல சமூகங்களுடன் பழகுகிறோம் புதியவைகளை பெற்று கொள்ளுகிறோம் ..ஏன் சிலர் இந்த நாட்டு மக்களுடன ஓன்று கலந்து காதல் செய்கிறார்கள் ,கலவி செய்கிறார்கள்,கலியாணம் செய்கிறார்கள் ,விவாகரத்து செய்கிறார்கள்..சில வேளை விவகாரப்பபடுகிறார்கள்...அவர்��
�ள் அப்படி இல்லை தாயகத்தில் இருந்து அப்படி பெயர்த்து எடுத்து வந்து லண்டனிலை வாழ்கிறார்கள் .இன்னும் சொல்லப் போனால் தேவை இல்லாத (rat race)எலி ஓட்ட வாழ்க்கையை ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

மச்சான் ...அவங்கள் எதையோ தொலைத்து விட்டு என்ன தொலைத்தது என்று தெரியாமால் எங்கையோ தேடி கொண்டிருக்கிறார்களடாப்பா.

மற்ற ஒன்றடப்பா.. கொஞ்சம் படிச்ச மட்டம் என்று நினைத்து கொள்ளிறவியளினரை கூத்து பார்க்க இயலாது என்று தொடர்ந்தான்

இந்த படித்தது என்ற ஜாதி கூட்டம் ...தமிழனுக்கு முன்னாலை வெள்ளைக்காரன் மாதிரி காட்டி கொள்ளுவினம்..வெள்ளைக்காரனுக்
கு முன்னாலை தங்களை சரியான பச்சை தமிழனாக காட்டி கொண்டு நிற்ப்பினம்

என்னடா லண்டனை பற்றி கேட்டால் லண்டன் தமிழரை பற்றி சொல்லிறியே இடை மறித்து நான் கேட்டால்...

அவன் அதற்க்கு பதில் கூறவில்லை கதையை மாற்றி ஹாலந்து நாட்டிற்க்கு அவன் வந்த காலகட்டத்து கதையை ஆரம்பித்து விட்டான்

மச்சான் நான் வந்த புதிதில் அம்ஸராடமில் தான் எல்லாரும் இருந்தோம் ..சிறிலங்கா என்ற நாடு உலகத்தில் எங்கை இருக்கு என்று கூட டச்சுக்காரங்கள் அநேகமானவருக்கு தெரியாது. எங்கட பொடியள் கூட்டம் கூட்டமாக திரிஞ்சாங்கள். அவங்கள் தோளிலை கை போட்டு சென்றதை அவதானித்த டெலிகிராப் பத்திரிகை ..எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக காட்டுமிராண்டி ஓரின சேர்க்கையாளர்கள் குழுவாக அம்ஸ்டர்டாம் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று இன வாதம் கக்கியது.

சொன்னால் நம்பமாட்டாய்...என்னை ஒரு டச்சு சமூக சேவகி வந்த புதிதில் ஒரு முறை கேட்டாள் உங்களுக்கு பந்து தெரியுமா ..சைக்கிள் தெரியுமா என்று ...நல்ல காலமாக அவள் இப்படி கேட்காமால் விட்டுட்டாள் காதல் தெரியுமா செக்ஸ் தெரியுமா என்று. எங்களை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த ஆட்கள் என்று நினைத்தாளோ என்னமோ.
பிறகு எங்களுடன் பழகி எங்களை பற்றி தெரிந்து கொண்ட பின் அப்படி நினைத்ததை வெட்கப்பட்டாள் என்றது வேற கதை



இவனது சம்பந்த சம்பந்தமில்லாமால் மாறும் கதையை கேட்க நான் தயாரில்லை என்று எனக்கே தெரிந்தது,,,இந்த தண்ணி அடித்த கிக் போவதற்க்குள் பல நாள் கொள்ளாத எனது நித்திரையை கொள்ள வேண்டும் நினைவு வேற உணர்த்த போவோமா என்றேன்

பாருக்கு வெளியே மூவரும் வெளியே வரத்தான் தெரிந்தது நடுநிசி கடந்து விட்டதை. .டச்சு நடுத்தர ஜோடி ஒன்று நல்ல நித்திரை கிடைக்கட்டும் டச்சு மொழியில் எங்களை வாழ்த்தி கொண்டு வெளியேறி கொண்டிருந்தது.

அதோ தூரத்தில் மங்கிய ஒளியை கக்கி கொண்டு சோம்பிய மாதிரி இருக்கும் கட்டிடத்துக்குத்தான்...திரும��
�ப செல்ல வேண்டும்......இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று அடைந்து விடுவோம்