Pages

வாசகர் வட்டம்

Wednesday, December 22, 2010

யாழ் தியேட்டரில் பார்த்த எந்திரன்

ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக முழுமையாக நிரம்பாத யாழ் நகரமே அப்பொழுது நிரம்பி வழியும் ...

ஆனால் அங்கு போகும் போது யாருமே இல்லை தனித்து விடப்பட்ட கட்டவுட் எந்திரன் ரஜனி.தான் ஆடாமால் அசையாமால் நின்று கொண்டு இருந்தார். பிறகு மெல்ல மெல்ல சிலர் வர தொடங்கினர் .அப்படி வந்தவர்கள் அநேகர் இளம் ஜோடிகள் படம் பார்ப்பதுக்கு ஆர்வம் உள்ளவர்கள் போல காணப்படவில்லை ..ஒதுங்க இடம் தேடி வந்தவர்கள் போலவே காணப்பட்டனர் . வெளிநாட்டில் இருந்து வரும் காசில் சும்மா ஊதி பெருத்து வெறும் பட்டோபம் காட்டும் நபர்களாகவே எனக்கு தெரிந்தது.இந்த பனியிலும் குளிரிலும் ஏதோ ஏதோ வழியில் உழைத்து இங்கு அனுப்பு பணத்தில் என்ன செய்வது என்று தெரியாமால் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது பட்டது.,ராஜா தியேட்டரின் உள் சுவர்களில் எனது கண்கள் நோட்டமிட்டன. பல கறுப்பு வெள்ளை பிறேம் போட்ட படங்கள் மாட்டி இருந்தன. அதில் அந்த காலம் எம்ஜீஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தின் வெள்ளிவிழா நிகழ்வின் படங்கள் இருந்தன.அந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கு எம்ஜீஆர் மற்றும் சரோஜதேவி போன்றோர் இந்தியாவிலிருந்து யாழ் வந்த போது ரசிகர்களை கட்டு படுத்த முடியாமால் ராஜா தியேட்டர் ஒரு பக்க மதிலையே அப்போது உடைத்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.


எனது வயது மாதிரி உள்ளவர்கள் ஒரு தரும் படத்துக்கு அங்கு வருகை தந்து இல்லாமையால்
எனக்கு ஓரு மாதியாக இருந்த மாதிரியும் இருந்தது. ஓரு மாதிரியாக இல்லாத மாதிரி இருந்தது.நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பல்கனி ,சூப்பர் பல்கனி என எழுதி இருந்தது ..ஒரு சூப்பர் பல்கனி தாங்க என்று நான் சொல்லி முடிக்க முன்பு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு அண்ணை வெளியிலிருந்தா ..உங்கா உதுகளின் அட்டாகசாம் தாங்க முடியவில்லை ..சூப்பர் சூப்பிரில்லாதது என்று இப்ப ஒன்று மில்லை எல்லாம் ஓன்று தான் இப்ப என்றார்...தாங்க அந்த ஓன்றை என்று கேட்டு வாங்கி உள்ளே நுழைந்து நல்லா சுற்றும் விசிறி கீழுலுள்ள கதிரையில் இடம் பிடித்து கொண்டேன் . எனது நல்ல காலமோ கெட்ட காலமோ தெரியாது என்னை சுற்றி அந்த இளம் ஜோடி பட்டாளங்கள் ,அமர்ந்திருந்தது
படம் இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதுக்கு முன்பே அங்கே அவர்கள் படம் காட்ட தொடங்கி விட்டார்கள்.அத்தோடை இந்த மேலே சுற்றும் விசிறி உடம்பில் இருந்து வெளியில் கொட்டு வேர்வையை உறிஞ்சி எடுக்க போதுமானதாக இல்லை .. ஆனால் அதை விட சுற்ற வர உறிஞ்சும் சத்தங்கள் இயல்பாக வந்து கொண்டிருந்தது .என்ன கோலா பன்ரா ஸ்ரோவிலை சத்தத்தோடை குடித்து கொண்டிருக்கனம் போலை என நினைத்து கொண்டிருக்க. கன காலம் கண்டு இப்ப எங்கை என்ற படி ஒரு குரல் .எனது தனிமையை பறை சாற்றியபடி இருந்த வெறுமையான பக்கத்து கதிரையில் அமர்ந்தது

அந்த குரலுக்கு சொந்தக்காரனை மேலும் கீழும் நான் பார்த்து கொண்டிருக்கும் தவிப்பை கண்ட அவர் . என்ன அதுக்கிடையிலை மறந்து போனீங்களே?. அதுக்கிடையிலே என்று அவர் சொன்னது ஏறக்குறைய இருப்பத்தைந்து முப்பது வருட காலப்பகுதியை. இவர்களைப் போல காலத்தின் அளவுகளை நன்மை என்றால் என்ன தீமையென்றால் என்ன உணர்ந்து உணர்வூர்பாக வாழ்பவர்களா நாங்கள். எங்கையோ எதையோ தொலைத்து விட்டு தொலைத்தது எது என்னவென்று தெரியாமால் எங்கேயோ தேடி கொண்டிருப்பவர்கள் அல்லவா நாங்கள் , முன்பு ஓடும் எலி எங்கேயோ ஓட காரணம் தெரியாமால் பின்னால் ஓடும் எலி கூட்டம் போல உள்ள கூட்டங்கள் அல்லவா நாங்கள் .குளிர் பனி குவியலுக்குள் உணர்வுகளை புதைத்து விட்டு வாழ்பவர்கள் அல்லவா நாங்கள்..இப்படி எண்ணி கொண்டிருக்க அவர். என்ன கனக்க யோசிக்கிறியள் ?முன்னுக்கு பின்னுக்கு பக்கத்திலை நடக்கிற திருவிளையாடலையா ?என்று கேள்வியை அவரே கேட்டு அவரே பதிலை சொன்னார் . இதெல்லாம் இப்ப இங்கை சகஜம் பாருங்கோ என்று.அந்த காலம் ஜரோப்பாவிலை இதெல்லாம் சகஜம் என்று தங்கள் நினைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சொன்னவர்கள் வாயாலே இப்படி சொல்ல வைக்கும் கால மாற்றத்தை நினைத்து பார்த்தேன்.


.இவர் சொன்ன மாதிரி இப்ப தான் சகஜம் என்று இல்லை எப்பவும் உது சகஜமாக தான் இருந்தது ..ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து சங்ககாலத்து களவியலூடாக எனக்கு தெரிய ராணி தியேட்டர் பொக்ஸ் றூம் வரையும். சுஜாதா சிவாஜி திரை படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார் தமிழ் பெண்களை பார்க்க யாழ்ப்பாணம் தான் போகவேணும் என்று..இந்த வசனம் யாரை திருப்தி படுத்தியதோ இல்லையோ தெரியாது .நிச்சயம் இன்னும் யாழ்ப்பாணிய சிந்தனை உள்ள இந்த கலாச்சார காவலர்களை கட்டாயம் திருப்தி படுத்தி இருக்கும் . இந்த வெளி உலகம் தெரியாத வெறும் புத்தகத்துக்குள் மட்டும் தலை ஓட்டி கொண்டிருந்த இந்த அம்மு பேபிகளுக்கு தான் நான் இப்படி சொல்வது கோபம் வரும் என நினைக்கிறேன்.


படம் இடைவேளையை தாண்டி ஓடி கொண்டிருந்தது.படத்தோடை ஒட்ட முடியவில்லை..படத்தின் கதை போக்கை முன்பே ஊகிக்க கூடியதாய் இருந்தது ..இந்த சீறீதர் காலத்து முக்கோண காதல் கதையை கம்பியூட்டர் கேம் போல படத்திலை காட்டினம் அவ்வளவு தான் ..இந்த படத்தில் புதிதாக கதை இருக்கிற மாதிரி தெரியலை .அதுக்குள்ளை என்ரை கதை அவன்ரை கதை என்று சண்டை சச்சரவு வேறை ...இப்படி பார்க்க போனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு உதே மாதிரியான சாயலில் கதை சொன்ன மெக்கானிக் அண்ணையுமெல்லோ வழக்கு போடோணும் .

இந்த படம் போரடித்தமையால் எனது மனம் இந்த கதை போல சொன்ன அந்த மெக்கானிக் அண்ணையுடன் பழகிய கால சம்பவங்களின் நினைவுகள் படம் முடியும் மட்டும் போரடிக்காமால் வைத்து கொண்டு இருந்தது..

இந்த மெக்கானிக் அண்ணை எனக்கு எனது பதின்ம வயதுகளில் இருந்து பழக்கம் ..எனக்கு எப்படி இவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வருகுதில்லை.எனக்கு மட்டுமல்ல என்னோடை வயதை ஒத்த பல நண்பர்களுக்கும் நடுத்தர வயதை அண்மித்த இவருடன் சிநேகபூர்வமான பழக்கம் இருந்தது. மெக்கானிக் அண்ணை தனக்கு தானே தீவிர இடதுசாரி பொதுவடமை வாதி என முத்திரை குத்தி கொண்டவர்,எட்டாம் வகுப்பு படித்த அவரால் அவருக்கு சித்தாந்த வகுப்பு எடுக்கும் ஆசான்களின் திறமையால் என்னவோ உலக நடப்புகளை அழகாக கதைப்பார் .அதுமட்டுமன்றி சமூகத்தின் மேலுள்ள பார்வையை ஆடாமால் அசையாமால் ஓரு நேர்கோட்டில் பார்க்க வைத்த எங்களின் பள்ளி வீட்டு அறிவை விட வித்தியாசமான கோணத்தில் காட்டி அவர் பொழிப்புரை செய்ததது எங்களுக்கு புதிதாகவும் ஆவலாகவும் இருந்திருக்க கூடும். அதனால் எங்களுக்கு அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்க கூடும்.


எனக்கு பழைய குமுதம் விகடன் கார்ட்டூன்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இருந்தது ..அதில் ஒரு கார்ட்டூனில் ஒரு கரும் பயங்கர பூதம் சீன பகுதி இலிருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அருணாசல பகுதியில் இரு கைகளை வைத்து ஆக்கிரமிப்பிக்கிறாதாக இருந்தது. எங்களின் தாய் நாடாக எங்களுக்கு சொல்லி தந்த இந்தியா மேலே கை வைக்கிற ஒன்று மேலே கோபம் வெறுப்பு வராதா என்ன? என்ன தான் பழகினாலும் மெக்கானிக் அண்ணையிடம் ஒரு நாள் கேட்டே விட்டேன் இதை காட்டி என்ன உங்கடை கொம்னீயூஸ்ட் என்று.

அதுக்கு அவருக்கு அரசியல் வகுப்பு எடுத்தவர்கள் சொல்லி கொடுத்ததை வைத்து சொன்னாரோ அவராக சிந்தித்து சொன்னாரோ தெரியாது .அதுக்கு அவர் சொன்ன விளக்கம் காலனித்துவ காலத்தில் பிரிட்டிசார் இந்த நிலபரப்புகளுக்கள் முரண்பாடுகள் இருக்கவேணும் என்றதுக்காக திட்ட மிட்டு செய்த விடயம் இது என்றும் ..இப்படி கார்ட்டூன் போடுவது மூலம் கம்னீயூசத்தில் வெறுப்பு ஏற்பட செய்வதற்க்காக இந்த முதலாளித்தவ பத்திரிகைகள் செய்யும் திட்ட மிட்ட பிரச்சாரம் இது என்றும் கூறினார் , இப்ப எங்களுக்கு கம்னீயூசம் என்ற சொல்லோடை காலனீத்துவம் முதலாளித்துவம் என்ற இரண்டு புது சொற்கள் கூட தெரிந்து கொண்டோம்.

இப்படி பல கோணத்தில் நாங்கள் கேட்கும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் மெக்கானிக் அண்ணை ஒரு நாள் தான் திருத்தும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காதல் செய்கின்றது தங்களுக்குள் அடிபடுகின்றன என்றும். தான் இரவில் இதை படுக்கும் போது உணர்கிறேன் என்றும் .இதை தன்னால் மட்டும் தான் உணர முடியுமென்று என்றும் கூறினார்......இவ்வளவு தெரிந்த மெக்கானிக் அண்ணை உப்பிடி லூசு மாதிரி கதைக்காலாமோ என்று பரிகசிக்க ..அதுக்கும் தனது பாணியில் சித்தாந்த விளக்கம் தர முற்பட்டார் . நாங்கள் எங்களுக்குள் கதைத்து கொண்டோம் .கோவூரின் மனோத்துவ கதை சம்பவங்கள் வரும் உள பிறழ்வு அடைந்த நாயகர்களில் ஒருவர் மாதிரி எங்கடை மெக்கானிக் அண்ணை மாறிவிட்டார் என்று

இப்படி உளப்பிறழ்ந்த மன நிலையில் தான் இந்த படத்தை எடுத்தவர்கள் எடுத்திருப்பார்களோ என நினைத்து கொண்டு படம் முடிய அவசரம் அவசரமாக பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்

Monday, November 01, 2010

திசை மாறிய பறவைகள்


ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்கரித்து போகும் முன்னே உயிர்ப்பித்து கொண்டு இருந்தது.


அந்நிய நாட்டு குடிமகனின் அந்தஸ்த்துடன் பிறந்த நாட்டுக்கு வரும் என்னை ப்போல உள்ள சிலரையும் வேறு பல்லின பல நாட்டு குடிமக்களையும் காவி வந்த விமானம். அதீத மெளனத்துடன் தரை இறங்க முடியாமால் தவித்து பின்ஒரு விதமாக தரையை தொட்டது .இந்த இருப்பதைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டில் என்னவல்லாம் நடந்து முடிந்து விட்டது. அப்படி ஒரு அசுமாத்தமில்லாத மாதிரி சனங்கள் இயங்கி கொண்டிருந்தனர் .உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.

விமான நிலையத்துக்கு வெளியில் எங்களை ஏற்றிச்செல்ல யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகவே அங்கு வந்த வான் ஒன்று காத்து கொண்டிருந்தது,.கொழும்பு செல்லாமாலே யாழ் செல்ல போகிறோம் என்று வாகன சாரதி சொன்ன போது இந்த இருப்பதைதந்து வருட காலத்தில் எத்தனை தடைகள் தாண்டி ஊர் சென்று வந்தவர்கள் சொன்ன கதைகள் ஞாபகம் வந்தது.ஒரு பத்து மணித்தியாலத்தில் விமானத்தில் கொழும்பு அடைந்தவர்கள் நாட்கள் கிழமைகள ஏன் சிலவேளை மாதம் கடந்து தான் ஊர் சென்று இருக்கிறார்கள். வான் .புத்தளமூடாக அனுராதபுரம் வ்வுனியா என்று சென்று ஓமந்தையை அடைந்தது .

அங்கு ஒரு இராணுவச்சாவடியில் எங்களை பரிசோதித்தார்கள்.வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இலங்கையராக இருந்தாலும் வடக்குக்கு செல்வதாய் இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் நடைமுறை இருக்கிறது, அதனால் அங்கு பரிசோதிக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து செல்பவர்களும் இதனால் குழம்புவது வழக்கமாக இருந்தது . வெளிநாட்டு பாஸ்போட்டுடன் வருபவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தால் அந்த பாஸ்போட்டில் பிறந்த இடம் போட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரம் எடுக்க தேவையில்லை என்பது தான் நடைமுறை உண்மை .இதை விளங்கி கொள்ளாத அந்த அதிகாரி என்னிடம் கேட்க நான் விளங்கபடுத்தினேன். பின் அந்த பிறந்த ஊர் எங்கே யாழ்ப்பாண்த்தில் என அவன் குழம்பி கொண்டிருக்க .அவனுக்கு புவியியல் பாட்ம் எடுத்து விளங்கபடுத்திய பிறகு தான் எங்களை அனுப்பினான்.

ஊரை அடைந்த போது நள்ளிரவை தாண்டிவிட்டது. அந்த ஊரின் அழகான விடியலுக்கான ஆயத்தங்களை அந்த நேரம் அந்த இரவு செய்து கொண்டிருந்தது.வீட்டு பின் மாமரத்தில் இருந்த சேவல் ஒன்று விடிந்து விட்டுது என்ற தவறாக அடையாளம் கண்டு என்னவோ சோம்பல் முறித்து கூவியது.வீட்டில் நுளம்புடன் தற்காப்பு யுத்தம் செய்வதற்க்கான துணை கருவிகள் படுக்கும் அறையில் தாரளமாக கிடந்தன.இவ்வளவு நுளம்பை எதிர்க்கும் தற்காப்பு கருவிகளோடு அந்த காலம் தூக்கத்தை தழுவினதாக ஞாபகம் இல்லை .அதனோடு சமரசம் செய்து கொண்டு அழகான நித்திரை கொண்டதாக தான் ஞாபகம் . அன்று இரவு அவ்வளவு பிரயாண களைப்பு. தூக்கம் தானே தாலாட்டி தானே தூங்கி கொண்டது ..

.விடிய எழும்பி பார்க்கும் போது தற்காப்பு கருவிகளுடன் படுத்தவர்களுக்கு கூட அங்கும் இங்கும் நுளம்பு முத்தம் கொடுத்த தடங்கள் இருந்தன. என்னை ஏனோ தீண்டவில்லை ...சில இரத்த குறூப் உள்ளவர்களை தான் நுளம்பு தீண்டுமாம் என்று அந்த விடியல் பொழுதில் ஒரு பெரிசு ஒன்று மருத்துவ குறிப்பு சொல்லி கொண்டிரிந்துச்சு...அந்த வகையில் நான் ஒரு தீண்டதகாதவன் ..அதுவும் ஒரு சந்தோசமே.

நான் அந்த காலத்தில் வழமையாக ராஜ நடை போட்டு செல்லும் சந்திக்கு சென்று பழகியவர்கள் தெரிந்தவர்களை சந்திக்கலாம் என்று கிளம்பினேன் .செல்வதற்க்கு மூலையில் இருந்த பழங்கால சைக்கிள் தான் கண்ணில் பட்டது அதை எடுத்து கொண்டு செல்ல .. இங்கை ஒவ்வோரு வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டு மோட்டர் சைக்கிள் நிற்கிது ,,உந்த ஓட்டை சைக்கிளிலே போக போறீயே என்று ஒரு கெளவரவ பிரச்சனையை வீட்டிலிருந்த பெருசு ஒன்று எழுப்பியது. இது போன்ற கெளவரவ பிரச்சனைகள் அப்பவும் இருந்தது இப்பவும் இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று மனதில் சொல்லி கொண்டு எனது பாதையில் அந்த சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

அந்த காலத்தில் அந்த சந்திக்கும் வீட்டுக்கும் ராஜநடைபோடும் கொஞ்சம் நேரத்தில் எத்தனை பேருக்கு அறிமுக சிரிப்பு சிரித்து எத்தனை பேரின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன் .அப்படி ஒரு நட்பு வட்டம் தெரிந்த கூட்டம் இருந்தது

இப்பவும் அது போல அந்த சந்தி செல்லும் போது தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களாக போகிவிட்ட நிலமை ...அவர்களும் பரக்க பரக்க வெறித்து பார்த்து அடையாளம் காணும் முயற்சி செய்து பின் தோல்வி அடைந்து தன் பாட்டில் என்னை கடந்து செல்லுகிறார்கள் ..எனது இளம் நரையையும் முன் பின் வழுக்கையையும் மறைப்பதற்க்கு நான் எடுத்து கொண்ட முழு மொட்டை வேடம் தான் .அவர்கள் என்னை அடையாளம் காண முடியாமால் நிற்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டாலும் உண்மை அது அல்ல.நானும் அவர்களின் நரைத்த மீசையூனூடாக உற்று பார்த்தாலும் அவர்களை அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பமும் நடந்து கொண்டிருந்தது.

அப்படிச்செல்லும் போது என்னை அடையாளம் கண்ட மெலிந்த களைத்த உருவம் ஒன்று எப்படா மச்சான் வந்தனீ என்ற குரலுடன் வழி மறித்தது. அவனை கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏன் ஏன்றால் எனக்கு இந்த இருபத்தைந்து வருட காலத்தில் கேள்வி பட்ட காது வழி வந்த கதைகளில் ஒன்று அவன் இறந்து விட்டான் என்று ..அவன் என்னுடன் படித்த வகுப்பு தோழன் ..மார்கண்டேய தமிழ் நடிகரின் பெயர் கொண்ட அவன் ..படிக்கும் காலத்தில் கெட்டிகாரன் படிப்புக்கு பிறகு தான் உலகத்தில் எல்லாம் என்ற எண்ணம் கொண்டவன் . படிப்பில் தோல்வி அடைந்தவர்களை பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களை அவனது நக்கல் நளினம் படாது படுத்தும் .அந்த நக்கல் நளினத்துக்கு ஓடி ஒழிந்தவர்கள் இன்று உலகம் முழுதும் பேராசிரியர்கள் டாகடர் பொறியலாளர்கள் பல வல்லுனர்கள் என பரந்து இருக்கிறார்கள்...

ஆனால் அவனது பிச்சைக்கார கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .அது மட்டுமன்றி சாப்பிட்டுக்கு வழி இல்லை மச்சான் எனக்கு .ஏதாவது உதவி செய் என்று பிச்சைக்காரத்தனமாக இரந்தது எனக்கு ஏதோ செய்தது.நானும் வெளிநாட்டில் வாழும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒப்பிக்காமால் எனது சக்திக்கு மீறிய தொகையை அவனது கைகளில் கொடுத்துவிட்டு மாறி விட்டேன்.

அன்று இரவு நுளம்பால் பிரச்சனை இருக்கவில்லை இவனை நினைத்து அன்று தூக்கம் இன்றி தவித்தேன், .யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் அனுமதி கிடைத்து இரண்டு வருடங்கள் முடிய முன்பே. அவ்வூர் சந்தி படியாத வர்த்தகர்களால் டாக்டர் என்று செல்ல பெயர் கொண்டு அழைக்க பட்டான்.அவனின் திறமையான டைம்மிங்கில் விடும் பகிடிக்காகவே .அவனை திரும்பி பார்க்க மனமில்லா பெட்டைகள் கூட திரும்பி பார்த்து சிரித்து செல்லுவார்கள் .அவனுக்கு தனது படிப்பின் மீது இருந்த அதீத பெருமையால் படிப்பை தவறவிட்டவர்களை கேலி செய்வதை வழமையாக கொண்டிருந்தான்.

எங்களில் சில பேர் இந்த மனப்பாடம் செய்து கிரகித்ததை திரும்ப ஒப்புவித்து அதனூடாக பரீட்சையில் வெற்றி அடையும் அளவு கோலை அறிவாக கொள்ளுவதில்லை .என அவனுக்கும் தெரியும் .அதனால் .எங்களுடன் அந்த நக்கல் நளினத்தை அவன் வைத்து கொள்ளுவதில்லை .என்றாலும் அவன் என்னை பார்த்து ஒரு முறை சொன்னது ஞாபகம்..உப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமால் உப்படியே தேவை இல்லாத்தை கதைத்து கொண்டிருந்தால் இப்ப வைத்திருக்கின்ற உந்த மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளோடை தான் 30 வருசம் சென்றாலும் திரிவாய் என்று.

அவனது அதீத தன்னம்பிக்கை மற்றும் இயற்க்கையாகவே இருந்த பைத்தியகாரத்தன்மை காரணமாக படு மோசமான முறையில் ராக்கிங் காலத்தில் ஈடுபட்டான் . பின் ஒர் இரு முறை பல்கலைகழக நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு கடைசியாக மருத்துவ பீடத்திலிருந்து முற்று முழுதாக நீக்க பட்டான் ..

பல்கலைகழக வரலாற்றிலையே ஒரு..மருத்தபீட மாணவன் தனது படிப்பு காலம் முடியும் முன்னர் நீக்கப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறன். பின் இவனது பெற்றோரின் பணம் வளம் மூலம் இந்தியாவில் தனது மருத்துவ படிப்பை படிக்க சென்றானாம் அங்கும் படிப்பை தொடராமால் ஏதோ முறையில் பெரும் பணத்தை உருவாக்கி கொண்டான் என்று கேள்வி பட்டு கொண்டேன் . இவன் ஒரு அதீத எம்ஜீஆர் ரசிகன் ..கிட்டத்தட்ட ஒரு சினிமா பைத்தியம் கூட ..அந்த சந்தியில் ஒரு தியேட்டரில்ஒரு முறை எம்ஜீஆர் படம் ஓடிய போது ஹவுஸ் புல் ஆகோனும் என்றதுக்காகவே சிலருக்கு படம் பார்க்க காசு கொடுத்த அனுப்பிய படித்த முட்டாள்.

அவனது இந்த சினிமா பைத்தியத்தை தெரிந்து கொண்ட சிலர் .ஏதோ முறையில் அவன் உழைத்த பணத்தை கொண்டு சினிமா தயாரிக்கும் வருத்தம் தரக்கூடிய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.படமும் தோல்வி அடைய . பெற்றோர்களும் இறக்க ..உறவினர்களும் கைவிட்ட நிலையில் இப்போது அவன் இப்ப அந்த சந்தியில் பிச்சைக்காரனாக சுற்றி கொண்டிருக்கிறான்.

அவனோடு படித்த ஒரு வகுப்பு தோழன் தான் அப்பிரதேசத்தில் உள்ள இலங்கையிலே பிரபலமான கல்லூரி ஒன்றின் அதிபராக ஆக இப்ப இருக்கிறார். இவனுக்கு அவ்வூர் வர்த்தகர்களுடன் கதைத்து ஏதாவது வேலை எடுத்து கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு அதே மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளில் திரும்பி வரும் போது ..என்னை வேகமாக கடந்த சென்ற மோட்ட சைக்கிளிலிருந்து எனது பெயரை இருப்பதைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்த அதே தொனியுடன் ஒலித்தது.

ஹெல்மட் மறைவில் இருந்து வெளியில் வந்த ஒருவன் . தன்னை அடையாளம் கொள்ளுகிறாயா என்று ஆங்கிலத்தில் கேட்டான் ..நான் பதில் சொல்லும் முன்பே தனது பதவிகளை பந்தங்களையும் விவரிக்க தொடங்கி விட்டான் ....முடிவில் வெளிக்கிடும் போது கூறினான் ..வெளியில் இருந்து வந்தனீங்கள் மச்சான் ஏன் இந்த ஓட்டை சைக்கிளிலை திரியிறாய் என்று ....அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் எனது பரதேசி கோலம் ..இப்படி பலதும் பத்தையும் நினைத்து கொண்டு வந்ததால் ..எனது பாதையை விட்டு எங்கையோ திசை மாறி விட்டேன்

வீடு திரும்ப இருண்டு விட்டது....அந்த அந்தி மாலை பொழுது இருப்பதைந்து வருடங்களுக்கு முன் இருந்த அழகை தந்து கொண்டிந்தது ..

அதை ரசித்து மனதை லேசாகி கொண்டிருந்தேன்

Wednesday, August 11, 2010

வலித்தாலும் வாழ்க்கை அழகானது

டிக் டிக் டிக்

ஓயாமால் கேட்டபடி

என்ன அது

அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது

அது ஒரு சுவர் மணிக்கூடு

அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்கும்
. பார்த்தவர்களுக்கும்..என்னை வருத்தக்காரன் மாதிரி என்று சொல்ல தோன்றாது....

ஏதோ தேவைக்காக யாருக்காகவோ ஆஸ்பத்திரி வந்த என்னை ஏதோ வருத்தமென்று பிடித்து வைத்திருக்கிறார்கள்...இரத்த பரிசோதனையில் ...வருத்தம் என்று டொக்டருக்கு தெரிந்திருக்கிறது ...அந்த செக்கிங் இந்த செக்கிங் எல்லா முடிந்தும் என்ன வருத்தம் என்று தெரியவில்லையாம் அதுக்காகவே சின்ன சத்திரசிகைச்சை செய்ய வேண்டுமாம்...

நாளைய பிணங்கள் இன்றைய நடை பிணங்கள் நேற்றைய சராசரி மனிதர்கள்..எல்லாரும்.இந்த வார்ட்டுக்குள் ..அவர்களை...குசலம் விசாரிக்க உறவினர்கள்...அன்பாகத் தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...இப்படி எப்பவும்.மற்ற சமயங்களில் அன்பாகத் தான இருந்திருப்பார்களா . ...ஏன் என்னுள் எழவேண்டும் இந்த கேள்வி ..ஏன் இந்த அவநம்பிக்கை ..என்று என்னை கேட்க இந்த மனசுக்கு அவகாசம் கொடுக்கவில்லை......இந்த ...சுவர் மணிக்கூடு எனது கட்டிலில் அருகில் இருந்து கொண்டு மீண்டும் தொல்லை கொடுக்கிறது

டிக் டிக் டிக்

ஓங்கி உதை விட்டு உடைக்க வேணும் போல் இருந்தது ...உடைக்கலாம் ..எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. பக்கத்து பெட்டில் இருக்கிறவன் ..லொக் லொக் என்று பிரேக் போடமால் இருமி கொண்டு இருக்கிறான்

இந்த அவல இருமலின் கனைப்பிலும் பார்க்க இந்த மணிக்கூட்டின் சிணுங்கல் எவ்வளவோ பரவாயில்லை என்று உணர்த்தியது

டிக் டிக் டிக்

இது தான் இந்த கணம் தான் உண்மை என்று அடிக்கடி உணர்த்தி கொண்டிருக்குதோ....

நாளைக்கு சத்திரசிகிச்சை ...இன்றைக்கே நான் சத்திரசிகிச்சை கூடத்தில் மனத்தளவில்...ஒரே பய பீதி ...ஒரு முறையும் இது வரை சத்திரசிகிச்சை செய்ய வில்லை...மரணமும் ஒருமுறையும் நிகழவில்லை தானே...அதை எல்லாம் நினைத்து இவ்வளவு காலம் பயந்து இருந்தேனா

.இந்த மணிக்கூடு டிக் டிக் என்று சத்தம் போட்டு விரைந்து ஓடுவதால் அதில் அந்த வெறுப்போ.....மணிக்கூட்டை ஓடாமல் சத்தத்தை நிறுத்தி விட்டால்...நாளை வராமாலா விடப்போகுது...அது சரி நாளை வராமால் இன்று எப்பவும் இருந்தால் நான் ஆஸ்பத்திரியில் எல்லவோ எப்பவும் இருக்கோணும்

அழகான பெண் நர்ஸுகளும் டாக்டர்களும் அங்கும் இங்கும் சிரித்து ஏதோ கதைத்து கலப்பாக கலப்பாக சென்று கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு என்ன அங்கு வேலை செய்பவர்கள் ....எங்களை போல நோயாளிகளா என்ன...அவர்களுக்கு ...இந்த ..டிக் டிக் உதவக்கூடும்....சிலருக்கு சிப்ட் முடிய உதவும் சிலருக்கு தொடங்க ..உதவும்...


அதில்....ஒரு நர்ஸ் கனிவோடு அந்த பக்கத்து பெட் கிழடோடு என்று பேசி கொண்டிருக்கிறாள்.......எனக்கு கொஞ்சம் பொறாமை தான் ..கொஞ்சம் முந்தி என்னோடு கனிவோடு மட்டு மன்றி சிரிக்க சிரிக்க பேசினாள்......அது அவளுடைய வேலை ..அவளுக்கு அப்படி பயிற்ச்சி அளிக்க பட்டு இருக்கிறது..என்று அந்த கணத்தில் புத்தி வேலை செய்யவில்லை


சத்திர சிகிச்சை பயத்தில் இருக்கும் பொழுது தேவையா இது என்று கேட்டால்....எந்த பய பீதியிலும்...ஹி..ஹி..ஹி....வாழ்க்கையின் சுவராசியமே அதில் தானே அடங்கி இருக்கிறது..... எல்லா நேரம் வாழ்க்கையில் பயந்து கொண்டு இருக்க முடியுமா...மரணமும் கட்டாயமும் நிகழத்தான் போகிறது....அதுக்காக இன்றைக்கே சுடுகாட்டில் இருக்க வேண்டுமா என்ன

நாளையை நாளை பார்த்து கொள்ளட்டும் என்று இருந்தால்...நாளையும் வந்து விட்டது..

அவள் அந்த நர்ஸ்தான் என்னை அந்த ஆஸ்பத்திரி கட்டிலில் வைத்து தள்ளி கொண்டு போகிறாள்....இப்படி எத்தனை பெயரை தள்ளி கொண்டு சத்திரசிகைச்சை கூடத்துக்கு போயிருப்பாள்...அவளிடம் தான் கேட்கிறேன்....இது என்னுடையது மைனர் ஒப்பிரேசன் தானே .. ரிக்ஸ் ஏதாவது இருக்குமே.என்று..அவள் சாதாரணமாக சொல்லுறாள் ...எந்த ஒப்பிரேசனும் ரிக்ஸ் தான் என்றாள்.சர்வ சாதாரணமாக

சத்திர சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை ஒன்று வீல் வீல் என்று சத்தம் போடுகிறது மற்ற பக்கத்தால் தள்ளி கொண்டு செல்லுகிறாள் இன்னோரு நர்ஸ்.அந்த குழந்தைக்கே வாழ்க்கையை தொடங்க முன்பே ...எங்களின் பட படப்பு அதுக்கு இப்பவே பற்றி கொண்டு விட்டது....

மயக்க மருந்து கை களினூடாக ஏற்றுகிறார் சத்திர சிகைச்சியாளர்.....மரணத்துக்கு பின்பு போல ..அதுக்கு பின் ஒன்றுமே தெரிய வில்லை

...அதே..டிக்...டிக் .. டிக் சத்தம் ..அந்த மணிக்கூட்டுக் கீழ் உள்ள
கட்டிலில் ...நான் ......உடம்பில் ...வலித்தது....உயிரோடு இருக்கிறேன் என்ற உணர்வு என்னிடம்...

வலித்தாலும் ...வாழ்க்கை அழகானது..

Thursday, August 05, 2010

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம்

திரைப்பட வரலாற்றில் தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் நிறைய இருந்திருக்கின்றன.. ஏன் திராவிட எழுச்சிக்கே திரைப்படத்தில் வரும் எழுத்தின் தாக்கம் மிக உதவியது.. மனோகராவில் பத்மாவதியாகா வரும் கண்ணாம்பா பேசும் வசனம் இது,"செவ்வாழைத்தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மங்கை உருவில் மகான் உருவில் இந்த மண்ணை வளைக்க வந்த மகாபாதர்களே!சரித்திரத்தை மறந்தவர்களே! செப்படி வித்தையால் செழுந்தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறுநரிக்கூட்டமே!". இப்படியான எழுத்துக்களால் எழுத்தாளர்கள் சினிமாவின் சாதனத்தில் புகுந்து சிந்திக்க வைப்பதோடு அந்தக் காலம் எழுச்சியூட்டினார்கள்

கல்கி புதுமைபித்தன் தொடங்கி இன்றைய பிரபலஎழுத்தாளர்கள் வரை சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறது.
புதுமை பித்தன் 1940 களில் வெளிவந்த காமவல்லி என்ற படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தாராம். இதே போல் கல்கி அவர்களுக்கும் சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறதாம். தம்முடைய நாவல்கள் எல்லாம் திரைபடங்களாக வேண்டுமென பெரிதாக விரும்பினாராம். அந்த வகையில் கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவல் பொன் வயல் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதே போல் கல்கியின் புகழ் பெற்ற "கள்வனின் காதலி" என்ற நாவல் திரைப்படமாக சிவாஜி பானுமதி நடிப்பில் 50களில் வெளிவந்திருந்தது. கல்கியின் முதல் வரலாற்று நாவலான "பார்த்திபன்கனவு" திரைப்படமாக வந்தது. அப்பொழுது கல்கி உயிருடன் இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் கமலகாசன் போன்றவர்கள் திரைப்படமாக்க முயற்சித்தார்க‌ள், ஆனால் இன்று வரை கை கூடவில்லை.


எழுத்தாளர் அகிலனின் புகழ் பெற்ற "பாவை விளக்கு" நாவலும் திரைப்படமாகியது. அகிலனின் மற்றொரு புகழ் பெற்ற, பரிசு பெற்ற நாவல் "வாழ்வு எங்கே". "குலமகள் ராதை" என்ற பெயரில் திரைப்படமாகியது. இரண்டிலும் சிவாஜி கணேசன் தான் கதாநாயகன் . இன்னுமொரு பரிசு பெற்ற நாவலான கயல்விழி என்ற நாவல்.. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக" வந்தது.


கன்னிமாடம் , யவனராணி கடல்புறா என நாற்பதுககு மேற்பட்ட நாவல்களை எழுதியிருந்த சாண்டில்யன் கூட "என்வீடு" என்ற திரைப்படத்திற்க்கு வசனம் எழுதியுள்ளார்.சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களும் ஆனந்த விகடனில் வெளிவந்த குறுநாவல் "யாருக்காக அழுதானை" நாகேசை வைத்து படமாக்கினார்.அதே போல் "உன்னைப்போல் ஒருவன்" என்ற நாவலை படமாக்கி இந்திய அதிபரின் பரிசைப்பெற்றார். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்", லட்சுமி நடிப்பில் உருவான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்றவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன.


கல்கண்டு பத்திரிகையை நடத்தி மற்றும் துப்பறியும் சங்கர்லால் மர்ம நாவலை எழுதி புகழ் பெற்ற தமிழ்வாணன்,ஜெயசங்கர் நடித்த "காதலிக்க வாங்க" என்ற படத்தை தயாரித்து கதை வசனம் எழுதியுள்ளார்.


மு.வ என்று அழைக்கப்படும் வரதராசன் அவர்களுடைய "கள்ளோ காவியமா" என்ற நாவல் "எங்கள் செல்வி" என்ற பெயரில் திரைப்படமாகியிருந்தது. அதில் ஏ.நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.மு.வ எழுதிய மற்றொரு நாவலான "பெற்றமனம்" கூட சிவாஜி நடித்த படமாக வெளி வந்திருந்தது.


சூரியகாந்தம்,மிதிலா விலாஸ்,காஞ்சனையின் கனவு என்று பல நாவல்களை எழுதியுள்ளார் பெண் எழுத்தளாரான லட்சுமி. அவருடைய காஞ்சனையின் கனவு என்ற நாவல் காஞ்சனாவாக 50 களில்திரைப்படமாக வெளி வந்திருந்தது. இதில் பத்மினி நடித்திருந்தார்.
மற்றுமொரு பெண் எழு்த்தாளரான சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை பாலசந்தர் அவர்களும் திரைப்படமாக்கியிருந்தார்.சிவசங்கரியின் மற்றுமொரு படைப்பான "அவன் அவள் ‍அது" திரைப்படமாகி சிவகுமார்,லட்சுமி,சிறிப்ரீயா நடிப்பில் வெள்ளி விழா கண்டது.

அநுத்துமா,லட்சுமி சுப்பிரமணியம் ஜோதிர்லதா கிரிஜா, அம்பை இந்துமதி, திலகவதி, சிவகாமி போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் கூட திரைப்படமாக்கக்கூடிய சிறந்தவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் இவர்களுடைய நாவல்கள் திரைப்படமானாலும் அதிசய படுவதற்க்கில்லை

ஆனந்தவிகடனில் தொடராக வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனம்பாள் திரையில் வந்து சக்கை போட்டது.சுஜாதாவின் இரண்டு நாவல்கள் படமாயிருக்கின்றன. அதில் கரையெல்லாம் செண்பகப்பூ என்று படமான நாவல் நா.வானமாமலை தொகுத்த நாட்டுப்புற பாடல்களை வைத்து எழுதியதாக சொல்வார்கள்.சுஜாதாவின் மற்றுமொரு நாவலான "ப்ரியா"வும் திரைபடமாகியுள்ளது . இதில் ரஜனி சிறிதேவி நடித்திருந்தார்கள். ப்ரியா நாவலின் களம் லண்டனிலிருந்தது. படத்தில் மலேசியா சிங்கப்பூரில் எடுத்திருந்தார்கள்.கோமல் சுவாமிநாதன் என்ற எழுத்தாளரின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தைதான் பாலசந்தர் அவர்கள் "தண்ணீர் தண்ணீர்" என்று திரைப்படமாக்கினார்.

ஈழத்தில் கூட செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைபடமாகியது.ராமதாஸ் அவர்கள் எழுதிய கோமாளிகள் ஏமாளிகள் றேடியோ நாடகம் திரைபடமாக வந்திருக்கிறது. கே.எஸ் பாலசந்தரனின் றேடியா நாடகம் தணியாத தாகம் திரைக்கதை அம்சத்துடன் இருந்தது. படமாக்க முயற்ச்சித்தார்களோ தெரியாது.

இப்படி இன்று வரை தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் சினிமாவில் இருந்து கொண்டேயிருக்கிறது.கமலகாசன் ஒருமுறை சிற்றிலக்கியக்காரரை சினிமாவில் வந்து பங்காற்ற வரும்படியும் அதன் மூலம் தரமான திரைப்படங்களை உருவாக்க அவர்கள் உதவ வேண்டும் கூறியது ஞாபகம் வருகிறது.

Wednesday, August 04, 2010

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்ச நேரம்


இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது

.நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர் மனைகளின் தொடர்ச்சிகள் தொடங்குகின்றன.தனித்து விடப்பட்ட அந்த சுண்ணாம்பும் சீமேந்து கலவையிலான அந்த ஓட்டு வீடு தான் அப்பம்மாவின் வீடு. அவவின் ஒரே பிள்ளையான அப்பர் பல முறை எங்களோடை வந்து இரு என்று கேட்டும் வராமால் பூதம் காத்த மாதிரி கொண்டு வாழ்ந்து கொண்டு வருது.. எங்கட றோட்டுக்கரை வீட்டிலிருந்து உள் ஒழுங்கைகள் ,காணிகளூடான ஒற்றையடி பாதைகளுக்களாலை போனால் உந்த வயல் மூலையிலுள்ள வைரவ கோயிலடியிலை மிதக்கலாம் ஒரு இரண்டு மைல் தானிருக்கு்ம்.

உந்த போகும் வழியில் அருகருகே வீடுகள் குறைவு சில இடங்களில் பத்தைகளாக கவனிப்பாரற்று கிடக்கும் காணிகளின் ஊடாக உந்த ஒற்றையடி பாதை வளைந்து செல்லுகிறது .பகலிலை என்றால் பிரச்சனை இல்லை . பாம்பு வேற விச ஜந்துகள் ஆக்கள் மிதிக்கோணும் நாங்கள் பதம் பார்ப்பம் என்ற மாதிரி போற வழியில் ஓய்வு எடுப்பினம் கொஞ்சம் இருட்டிட்டு என்றால் ரிஸ்க் எடுத்து கொண்டு தான் உதுக்காலை போகோணும்.

வைரவர் கோயிலடி அண்மையிலுள்ள கேணிகட்டில் சில இளைஞர்கள் சிரித்து கும்மாளமடித்து கொண்டிருக்கின்றனர் சில சிறுசுகள் அந்த கோயிலை சுத்தி திரியற பைத்தியத்தின் மேல் கல் எறிந்து வெறுப்பேத்தி விளையாடுகின்றனர்... ஒரு சோலி சொரட்டுக்கும் போகாத சும்மா தன் பாட்டில் புலம்பி திரியும் பைத்தியம். பாவம் அவர்களினது சேட்டைகளில் இருந்து தப்பிக்க படாத பாடு படுகுது. இன்னும் இருளவில்லை இருள முன்னம் கலைந்து விடுவார்கள்.உந்த வேப்ப மரத்தில்
முனி இருக்கு என்று கன காலமாக ஆக்கள் கதைக்கிறவை. கண்டவை கூட இருக்கினமாம் கொஞ்சம் தூரத்திலை சுடலையும் இருக்கிறதாலை பட்டினசபை லைற் கம்பமும் இஞ்சால் பக்கம் இன்னும் வரலை. கொஞ்சம் இருண்டால் காணும் இந்த பிரதேசத்தை பயங்கரமான இடமாக பிரகடபடுத்தி வைச்சுருக்குதுகள் சனங்கள். சங்கு ஊதி மணி அடித்து கேட்கிறது சவ ஊர்வலம் ஒன்று சுடலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. சிரித்து கும்மாளமடித்த கொண்டிருந்த இளைஞர்கள் அமைதியாகி பின்னு க்கு கைகட்டி ஒரு வித இனம் தெரியாத உணர்வுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர் . பிரேதத்துக்கு கை காட்ட கூடாதாம் கை காட்டினால் கை அழுகிடுமாம். இப்படி எத்தனை புலுடாவை சொல்லி வைச்சிருக்கினம் சனம்.
இந்த வைரவ கோயிலிலுருந்து அப்பம்மா வீடு வரை ஒரே வெளி ஒரு புறம் வயல் வெளி மறு புறம் சதுப்பு நிலம்... இருளுக்கு முன்னுக்கு போய் இருள முந்தி திரும்பி வர எண்ணி நினைச்சனான் ஆனாலும் இருள் என்னை முந்தி மெல்ல விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்பம்மா வீட்டு முன் மாமர இருட்டு இன்னும் அந்த வீட்டு தனிமையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.அப்பம்மாவின் தனிமையை போக்க அவ வளர்க்கும் மாடுகள் தாங்களே தங்கள் முகத்தால் உந்தி கேட்டை திறந்து உள்ளே போகின்றன.லாம்பு வெளிச்சத்தை கொஞ்சம் தூண்டிய படியால் என்னவோ இருளை கிழித்து வந்த வெளிச்சத்த்துடன் வந்த அப்பம்மாவின் குரல்

காடு கழிஞ்ச நேரம் எங்கை திரியிறாய் மோனை.. என்ற படி.. அண்டைக்கு சொன்னான் உந்த சுடலை குருவி கீச்சிடக்கை ஆரோ ஊருக்கிளை மண்டையை போடப்போயினம் என்று நீ நம்பேலை பாத்தியே என்றது ஏளனக்குரலில்
கொஞ்ச காலாமாக பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கிற தாடிக்கார மாமா வின் கதைகளை கேட்டா பிறகு இவவின்ரை மூட கதைகளை நம்பமால் உவவோடை வாதிடுறனான்.. அது தான் இப்ப நிறுவி நெளிச்சு காட்டுது உந்த மனிசி..

நல்லாய் இருட்டிட்டுட்டுட்து.. அமவாசை முன்னிருட்டு வேற.. வரக்க இருந்த சந்தோசம் இப்ப திரும்பக்க இல்லை பயப்பட ஒன்றும் இல்லை என்று உள் மனம் சொல்லிக்கொண்டாலும் வெளி சூழ்நிலைகள் பயத்தை கிளம்பிக்கொட்டி கொண்டிருந்தன. வயலின் அந்த மூலையில் சுடலையில் பனை இடுக்குககாளில் பிணம் எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.. இவ்வளவு நேரமாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் எரிந்து முடியல்லை .. வாழக்கையில் சில வேளை சில பேர் சில நேரத்தில் சொல்றவை இந்த கட்டை அவ்வளவு கெதியில் வேகாது என்று. உதுவும் அப்படியான கட்டை ஒன்று போலை.

முன்னுக்கு பக்கத்தில் வட்டமாக நெருப்பு மாதிரி சிறிய நெருப்பு அசைந்து வந்து என்னை கடந்து கொண்டிருந்தது. ஆரோ ஒருவர் சுருட்டை பத்தி கொண்டு எதிரான பக்கம் செல்கிறார் போலை அவர் செல்கிற வேகம் செருமல் அவரது பயம் பிராந்தியை எல்லாத்தையும் நல்லாய் காட்டியது..

இப்பொழுது நான் மட்டும் தான் அந்த வெளியில். தூரத்தில் தெரியும் அந்த வைரவர் கோயிலில் பயம் காட்டி எரியும் தூண்டமாணி விளக்கை கடந்து விட்டால் பிரச்சனை இல்லை . அங்காலை போனால் பாம்பு பூச்சிகள் தானே தெரிஞ்ச சாமான்தானே. பயம் இல்லை. தெரியாததுக்கு தானே சரியான பயமாயிருக்கு இந்த மரணம் பேய் பிசாசு முனி எல்லாம் அப்படியான விசயம் தானே.....

பாதையின் மற்ற பக்கத்தில் சதுப்பு நில பக்கத்திலிருந்து உயரமாக நெருப்பு துகள் என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது... அப்பம்மா சொல்ற மாதிரி கொள்ளி வாய் பிசாசோ.. வேகமாக ஓட வேகமாக ஓட வேகமாக துரத்துது மெதுவாக நடந்தால் மெதுவாக துரத்துது .. கிறிஸ்ரோபர் அலி நடிக்கும் ட்ரகுலா படங்களில் சிலுவையை காட்டி தப்பிக்கிற மாதிரி... ஏதாவது தேவாரம் பாடி தப்பிக்கலாம் என்று பார்த்தால் பித்தா பிறைசூடி... அங்காலை உள்ள வரிகள் சரியாக ஞாபகம் வர மாட்டுட்டுது.. பக்கத்து வீட்டு மாமா சொன்னவர் மெதேன் என்ற வாயு சதுப்பு நிலங்கள் உருவாகிறது என்று. அதைத்தான் கொள்ளி வாய் பிசாசு என்று சொல்றவை என்று.. உந்த புத்தி வேலை செய்யவில்லை தூண்டாமணி விளக்கடி மட்டும் மூச்சிறக்க ஓடிவந்தேன் .திரும்பி பார்த்தேன் நெருப்பு வெளிச்சத்தை காணவில்லை .

இங்காலை வைரவர் கோயிலடி வேப்பமரத்தடியில் திருப்பி பார்த்தன் ஓர் கரிய உருவம் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது......... ஹிஹி சிரித்தபடி... வைரவரா , முனியா ...வையந்திமாலாவை கல்யாண கட்ட போறனே. என்றபடி......கேட்ட குரலாக. இருக்கே... அந்த கோயிலை சுத்தி திரிந்த கொண்டிருக்கிற பைத்தியம் அதே தான்..

மீண்டும் அந்த குரல் கேட்க பேயடித்த நிலமையிலிருந்து திரும்ப வைத்தது. தூரத்தில் உள்ள சவக்காலைக்குள் கீச்சு சத்தம் போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிது அந்த குருவி.


Tuesday, August 03, 2010

எழுபதுகளில் தமிழ் சினிமா பெற்ற திருப்பு முனை



1973 இல் வெளியான அரங்கேற்றம் தொடர்ந்து இன்று வரை சினிமாவை பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும் sex பிரச்சனைகளை பயன் படுத்த முடியும் அலசி ஆராய இயலும் என்ற உயர்தர நோக்கு இல்லாமல் செக்சை இனிமேல் காட்டி பணம் பண்ண முடியும் என்று இப்படம் நம்பிக்கையை துணிச்சலையும் அளித்ததை மறுக்க முடியாது. இதே காலகாட்டத்தில் வட நாட்டு இந்தி படமான நியூவேவ் தமிழில் அவளாக மாறி. சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் கடற்கரையில் உருளும் காட்சி மூலம் தமிழ் A பட அந்தஸ்து க்கான படவரலாறு ஆரம்பிக்கபட்டது. அதே நேரத்தில் நடுத்தர பிரமாண குடும்ப அக்கிராகர அவலத்தை அரங்கேற்றம் படத்தின் மூல கொண்டு வர முயன்றதால் பாலசந்தர் பல எச்சரிக்கைகளை எதிர்ப்பை எதிர்நோக்கினார். அரங்கேற்றம் படத்திற்க்கு இந்த ஆபாச அந்தஸ்து சமரசம் செய்யும் முதுகெலும்பில்லாத முடிவு தான் காரணம் தான் என்பதை மறுக்க முடியாது

இதன் பின் அடுத்து வெளி வந்த படங்களான அன்னக்கிளியும் 16 வயதினிலும் பழைய வகை சினிமாவில் உள்ள போர்மிலா வகை தன்மையை நிராகரித்ததுடன். திரை பின்னால் இருந்த டைரக்சன் இசை எடிட்டிங் கமரா போன்றவற்றை சிலாகித்து கதைக்க கூடிய வகையில் புதியதோர் டெக்னிக்கில் மாற்றத்தை செய்தன. இளையராஜா நாட்டார் பாடல்களை மேற்கத்தைய கலவையுடன் சேர்த்து இசை அமைப்பால். பாடல்களும் ஒரு வித்தியாசமான தோரணையில் வெளிவந்தன.. இந்த காலகட்டத்தில் தான்.நடிகர்களின் தனி ஏகோ போக உரிமையை மட்டும் நிராகரித்து திரைக்கு பின்னால் பணியாற்றுவர்களின் தனி தனி திறமை பற்றி உற்று நோக்கப்பட்டது. இந்த சினிமா மாற்று சூழ் நிலை இதன் பின்னர் வந்த ஒரு தலைராகம் படத்தின அபார வெற்றியினூடாக மேலும் வலுவாகியது. சென்னை போன்ற நகர் புறங்களில் வெற்றி பெறும் படம் உசிலம்பட்டி சோழவந்தான் போன்ற கிராமங்களிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இந்த கால கட்டத்தில் தான் நடிகர்களுக்காக படம் ஓடிய நிலமை மாறி... டைரக்டர் களுக்காக படம் பார்க்கும் நிலை வந்தது. சினிமா பாமரச ரசனையை சற்று மாறு படுத்தி ரசிக்க வைக்கும் முயற்சி ஏற்பட்டது. மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரி பூக்கள், பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் கமராவினால் கதை சொல்லும் உத்திகளை பிரயோகித்து ரசிகர்களை ரசிக்க வைத்தன. இந்த கால கட்டத்தில் தான் கமலகாசன்,ஷோபா என்ற நடிகர்கள் தேசிய விருதுகள் பெற்றார்கள். பல அரசு பரிசுகளை பெற்ற படங்களான பாபு நந்தன் கோட்டின்,தாகம், ராஜாஜி கதையான திக்கற்ற பார்வதி, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, பாரதிராஜாவின், நிழல்கள் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் போன்றன இந்த காலத்தில் தோன்றின. இவை இலக்கிய வாதிகளின் பாராட்டையும் பெற்றன.. ஆனால் இதில் சில படங்கள் தான் ஓரளவு ஓடியது. இதன காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமா மாற்றமின்றி ஓர் தேக்க நிலையே காணப்பட்டது. இவ்வளவுத்துக்கும் மலையாள படவுலகமும் வங்களா படவுலகும் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்தன.

பின் வந்த படங்களில் வெறும் கலரையும் கமராவையும் காட்டி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்

Thursday, June 24, 2010

அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)


அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)



நேற்று கண்டது கனவு தான் இன்றும் காண்பதும் கனவோ என தன்னை நுள்ளி பார்த்து கொண்டாள் .வந்தவன் தேர்பாகன் என்பது தெரியும் ..தன்னை சபைக்கு அழைத்து வர சொன்னது என்று சொன்னது மட்டும் வாய் மொழியாக வந்து வெளியில் விழுந்தது ...

விழாதது,சொல்லாதது அவளை இழுத்து வர சொன்ன விசயம் அவனது முகத்தின் கடுமையில் தெரிந்தது.முகத்தை தொடர்ந்து கடுமையாக வைக்க முடியவில்லை வீமனின் தண்டாயுதம் அவனது எண்ணக் கோவையில் அங்கும் இங்கும் வலது இடதுமாக எம்பி குதித்து அவனை பயமுறுத்தி கொண்டிருந்தது. என்றாலும் தொடர்ந்து அவன் நச்சரிக்க இன்று எனக்கு அந்த நாட்கள் அதனால் சபைக்கு என்னால் வரமுடியாது என்று கூறு என்றாள் ..அப்படி சொன்னவள் அவள் பெயர் பாஞ்சாலி


அந்த ஐவரோடு அவர்கள் பின்னால் அந்த நாட்டுக்கு வந்தாள் .அவர்கள் ஜவருக்குமே இல்லகிழத்தி என்ற அந்தஸ்த்து,அவளுக்கு

பூரண கும்ப மரியாதை செய்து அது போல பல மரியாதைகள் செய்து இந்நாட்டு மக்கள் இங்கு நேற்று வரும் போது வரவேற்று மகிழ்ந்தது .அந்த ஜவருக்கும் ஒரு இன்ப மகிழ்வை கொடுத்திருக்கிலாம். ஆனால் அவளுக்கோ வேற மாதிரி இருந்தது.வேற எண்ணங்கள் அலை அலையாக வந்து அவை ஒன்றுடன் ஒன்றுடன் வந்து மோதி மனம் சாந்தி அடைய விடாமால் துரத்தியது ..காரண காரியமின்றி குழம்பி பின் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என
நினைத்து கொண்டே தன்னை அறியாமால் அந்த அறையில் ஒரு ஒழுங்கு முறையில்லாமால் தூங்கி விட்டாள்.

தூக்கத்திலை அவளது ஆழ் மனதை கலங்க வைக்கும் நிகழ்வாக அவளது மனத்திரையில் சலனப்படம் போன்று ஒரு கெட்ட கனவு ஓடிக்கொண்டிருந்தது.பலர் பெரியவர்கள் சான்றோர்கள் உறவினர்கள்
வீற்றிருக்கும் சபை மண்டபத்தில் அவன் துகிலுரிய கண்ணா கண்ணா என்று குழற அவளது சேலை முடிவின்றி வந்து கொண்டிருந்தது . தூக்க கலக்கத்தில் கனவோடு ஒன்றி கண்ணா கண்ணா என்று கூப்பிட்டது அவளது தூக்கத்தை குழப்பி நனவு நிலைக்கு திருப்பியது ...திரும்பியவள் தன்னை இழிநிலையில் தன்னை வைத்து பார்த்து வேதனை அடைந்தாள், .

அவளுடைய அவர்கள் என்று இந்த உலகம் சொல்லும் அந்த பஞ்ச பாண்டவர்களுடன் திரிந்து ஆலோசனை சொல்லும் மாயாஜாலம் செய்யும் இந்த கண்ணனை பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுப்பு ஏனோ அவள் மனதில் வந்து போகும் ...அதை முகத்தில் காட்ட விடாமால் கடும் பிரயத்தனம் செய்து இவ்வளவு காலம் தவிர்த்து வந்தாள்.....அப்படி வெறுத்த கண்ணனை கனவில் கூட உதவிக்கு கூப்பிட்டிருக்க கூடாதே ..என்று நினைத்தவள்...அப்பிடி கூப்பிட்டதை நினைத்து தனது ஆழ்.மனதை ஒரு கணம் வெறுத்தாள்

அன்று ஒரு நாள் துரியோதன் தடக்கி விழுந்ததை பார்த்து அவள் நகைத்ததாக அவன் நினைத்தானோ தெரியாது .ஆனால் அவனை அவள் நகைக்கவில்லை என்பது அவனுக்கு தெரியாத விசயம் .அதற்க்கு மாறாக அவனது கம்பீரத்துக்கு முன்னால் இந்த தடங்கல் எம்மாத்திரம் என்றே நினைத்து சிரித்தாள் .இந்த நினைப்பு ஏன் எழ வேண்டும் என்ற கேள்வியை அவளே எழுப்பி அவளே விடையை தானே கூறி கொண்டாள் .. தனது புன் சிரிப்பை தவறாக அர்த்தப் படுத்தி தன்னை பழிவாங்குவதற்க்காத தான் தங்களை விருந்து என்ற பேரில் இப்ப இங்கு அழைத்திருப்பானோ என்று யோசித்தாள்...


ஊரும் உலகமும் துரியோதனை பல அடை மொழிகள் வைத்து அவனை கெட்டவனாக உருவக படுத்தினாலும் அவள் மனம் அதை நிராகரித்தே இருந்து வந்தது.தனது நாயகர்கள் அம்பு வில்லு தண்டாயுதம் போன்ற வெளி கவசங்களுடன் மற்றும் நற் குணங்கள் என்று சொல்ல படுகின்ற போலி கவசங்களை சுமந்திருந்தப்பதாக பட்டது ..அவர்களிலும் பார்க்க பொய்யான போலி வேசம் இல்லாத தனக்கு பட்டதை எதுவோ அதில் உறுதியாக இருந்த அவனுடய நேர்மை பண்பு அவளுக்கு பிடித்திருந்தது.

..தனது கணவர்களை விட வேறு ஒருவனை சிறந்தவனாக பண்பாளானாக நினைக்கலாமோ அவளுக்கு ஊட்டி வைக்க பட்ட பண்பாட்டு குணாம்சம் ஒரு கணம் யோசிக்க வைத்தது. மறுகணம் தன்னை சுதாகரித்து கொண்டு தனக்கே கூறி கொண்டு சிரித்து தன்னுள் நகைத்து கொண்டாள் ,,...ஒரே நேரத்தில் தனது ஓரே மனதை அந்த ஜவர்க்கும் ஒரே நேரத்தில் பங்கிடவேண்டும் என நினைக்கும் இந்த பண்பாட்டு குணாம்சத்தில் பார்க்க தனது நினைப்பு எவ்வளவோ மேல் என கூறி கொண்டாள் .

சகுனியின் மீசை தானே எழும்பி சிலிர்த்து நின்று அவனது வெற்றி களிப்பை பறை சாற்றுவதோடு முகத்தில் ஒரு தேஜஸை கொடுத்தது..சூதாட கேட்ட போது பல தர்மங்கள் கூறி மறுத்த தருமன் இப்பொழுது தன்னிடம் நாடு இழந்து ,வீடு இழந்து ,செல்வம் இழந்து தன் தம்பிகளோடு தலை தொங்கி போட்டு நிற்பதை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது

. சபையில் தோன்றிய நிசப்தம் அடுத்த கணம் என்ன நிகழுமோ என்ற அச்சத்தை உருவாக்கி கொண்டிருந்தது ...அப்போது துரியோதனன் தேர் பாகனை பார்த்து போட்ட சத்தம் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் மேலும் அச்சத்தை ஊட்டியது


இந்த பேடிப்பயல் இதோ கதாயதித்ததை சும்மா மேலேயும் கீழேயும் போட்டுக்கொண்டு நிற்கின்ற இந்த வீமனுக்கு பயந்து அழைத்து வர தெம்பில்லா நிற்கிறான் ....தம்பி துச்சாதனா அவளை இழுத்து வா என்று கூக்குரல் இட்டான் ..அது அந்த சபை கட்டிடத்தில் மோதி இரண்டு மடங்கா வீச்சு கொண்டு பயங்கரமாக எதிரொலித்தது.


கூக்குரலின் பின்னால் துச்சாதனன் பாஞ்சாலியை அழைக்க அந்தப்புரம் சென்று விட்டான்.

துரியோதனனின் உள் மனதோ அவனிடம் அடுக்கு அடுக்காக் கேள்விகளை கேட்க தொடங்கி கொண்டிருந்தது

உண்மையில் இந்த பேடி பாண்டவர்கள் செய்த முட்டாள்தனத்துக்காக அவளை இந்த சபையில் அவமானப்படுத்த போகிறாயா?

இந்த முட்டாள் பிற்போக்கு வாதிகள் தங்கள் பாணியில் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி வகுத்து கொண்ட நல்லது ,கெட்டது,தர்மம்,அதர்மம்
என்ற பிரிப்புக்களை பறைசாற்ற இவர்கள் வகுத்த வேலை த்திட்டதுக்கு பலியாக போகிறாயோ?

இவர்கள் தங்களின் ஒரு நேர வேலைத்திட்டத்துடன் தங்களுக்கு சாதகமான ஒரு குருசேத்திரத்தை உருவாக்க காத்திருக்கிறார்கள் என்றதை நீ உணரவில்லையா?

இப்படி உள் மனம் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க அதற்க்கு விடை கொடுக்க இப்ப அவசியமில்லை ..அந்த அந்த கணம் முடிவு செய்யும் என்று சமாதன பட்டு கொண்டான்


கூந்தலை கடிவாளம் போல கையில் வைத்து அவளை இழுத்து வந்தான் துச்சாதனன் சபையினுள் ..அவளும் அவனது இழுவைக்கு ஏற்ற மாதிரி ஈடு கொடுத்த இழுபட்டு வந்து கொண்டிருந்தாள். சான்றோர் பெரியோர்கள் பலர் அங்கு வீற்றிருக்க கூட யாரும் தட்டி கேக்க திராணியற்று இருந்தனர் .

அவள் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவாள் என எதிர்பார்க்க எதிர்ப்பாப்புக்கு எதிர்மாறாக மெளனமாக அங்கு கூனி குறுகி இருக்கும் பாண்டவர்களே உற்று நோக்கி கொண்டிருந்தாள்.

மெளனத்தை கலைத்து தருமனை பார்த்து கேட்டாள்

என்னை உணர்வுள்ள பெண் என்று இல்லாமால் உனது சொத்தாக பாவித்து என்னை சூதில் ஆடினாய் சரி ..சூதாட்டத்தில் உன்னை இழந்த பின் என்னை எப்படி வைத்து சூது ஆடுவாய் நீ என்று கேட்டாள்...என்றும் இல்லாதவாறு அவள் ஒருமையின் பேசியதை கேட்டு திகைத்து நின்றனர் அந்த ஜவர்கள்

துரியோதன்ன் மீண்டும் கர்சித்தான் ....துச்சாதனா ..அவளை வழ வழ என்று என்ன பேச விட்டு கொண்டிருக்கிறாய் ...

.அவளுடைய சேலையை அவிழ் நிர்வாணப்படுத்து பின் எனது தொடையில் கொணர்ந்து இருத்து என்றான்


அவிழ்க்க நெருங்கி வந்த துச்சாதனை பார்த்து

..அதுக்கு அவசியமில்லைடா அவன் தம்பியே ...நானே என்னை நிர்வாணபத்தி கொள்கிறேன் என்று கூறியபடி தனது உடைகளை தளர்த்தி எறிந்தாள் ....


இதை எதிர்பார்க்காத சபை திகைத்து நின்றது .

இதை விட இவள் கண்ணா என்று அபயக்குரல் இடுவாள் .

தான் தனது மாயா ஜால கண் கட்டு வித்தை யினால் அவளது சேலையை அவிழ விடாமால் மட்டுமின்றி முடிவில்லா சேலையை அந்த சபையில் பரப்பி காட்டலாம் என்று காத்திருந்த கண்ணன். நிகழ்ச்சி நிரல் மாறு படுவதை கண்டு திகைத்தான்.

நகுலனும் சகாதேவனும் தங்கள் சோதிட கணக்கும் பிழைத்தது என்று திகைத்து நட்சத்திரங்களின் வரிசையை மீண்டு கணக்கிட தொடங்கினர்.

பாஞ்சாலி ..

அரைநிர்வாண கோலத்திடன் நின்று கொண்டே முழங்கினாள் ....இவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தங்களின் நலனுக்காக யுத்தத்தை உருவாக்குவார்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொள்ளுவார்கள் ..பின் இவர்களே ஒரு தீர்வை கொடுப்பார்கள் இப்படி தர்மம் வெல்லும் அதர்ம்ம் வெல்லும் என்று கொண்டு....


அதானால் நான் சபதம் இட மாட்டேன் ... ஏன் கெளரவர்களில் மூத்தவனே ஏன் கஸ்டப்படுகிறாய் ..

இந்த தொடை நடுங்கிகளுக்கு மனைவி வாழுவதை விட நானே தொடையில் வந்து அமர்கிறேனே .இதன் மூலம் நானும் நீயும்சேர்ந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவோமே என்றாள்

இதை சற்றும் எதிர்பார்க்காத துரியோதன்ன் சற்று சற்று திகைத்து பின் நோக்கி சென்றான்

பாஞ்சாலியின் இந்நடவடிக்கையை பார்த்து பூமி அதிர்ந்த மாதிரி உணர்வை சபையின் சான்றோர் உணரந்தனர்

மற்ற எல்லோரது காட்சி மன படிமங்கள் எல்லாம் ஆழிபேரலையில் அடிப்பட்ட பிணம் போல உணர்ச்சியற்று மிதந்தது

உண்மையில் பூமி அதிர்ச்சியும் வரவில்லை ஆழி பேரலையும் வரவில்லை

வரலாற்று தவறுகளை திருத்தியபடி அங்கு அவனும் அவளும் ஒரு யதார்த்ததில் இருந்து கொண்டிருந்தனர்



இக் கதை மிதுவின் கிறுக்கல்கள் வலைபதிவுக்காக எழுதப்பட்டது

Wednesday, May 26, 2010

முதல் பரிசு பெற்ற -எழுத்தாளர் ரஞ்சகுமார்


இலங்கையின் முன்னனி எழுத்தாளரான ரஞ்சகுமார் .அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் நடைபெற்ற சர்வதேச சிறுகதை போட்டியில் பல கால இடைவெளியின் பின் எழுதிய நவகண்டம் என்ற சிறுகதை மூலம் முதல் பரிசை பெற்றுள்ளார் .அவரை மிக்க மகிழ்வுடன் வாழ்த்துவதோடு அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்

1. நவகண்டம்
திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை.

2. எனக்குள் ஒருவன்
திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா

3. தண்டனை
திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா.

ஆறுதல் பரிசுகளாக (அவுஸ்திரேலியன் வெள்ளிகள் 50) தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகள்

4. திடுக்கிடும் தகவல்
திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை.

5. ஒரு சுதந்திர நாள்
திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை.

6. எனக்கான 'வெளி'
எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை.

7. ஒரு உயிர்; சில ஜீவன்கள்
திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

8. தொப்புள் கொடி
திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை
திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை.
10. பேர்த்திகள் இருவர்
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை.

11. பெரிய கல்வீடு
திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா.

12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை

Monday, May 24, 2010

மூன்று சிறுகதைகள்





(1) அந்த நகரத்து அழகி(சிறுகதை)
‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர்.


அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பதினாறே நிரம்பாத சில பொடியள் அவளை பார்த்து சல்லிக்கல்லு யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.



ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும் அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.

இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்

கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின் இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.
அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே பிடித்து விட்டான்.


நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும் வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க முந்தி.
அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான்

.ஆனால் பரட்டை தலையுடன் பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும் கிட்ட சென்றால் பல மாதம் உடம்பு கழுவதாதால் ஏற்படும் ஒருவித அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால் ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.



இப்படி ,,அண்ணே ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம் கிடைக்கும் சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல் தேவை இருப்பது போல் தெரியவில்லை . தெரியவில்லையோ மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் .

.அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து திட்டி கொண்டு செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம் ஏனெனில் தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க உண்மையிலையே இயற்கை கட்டமைப்பானவன்.

இந்த இடத்திலையும் இப்ப காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.

அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால் என்று கடைசி வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி பள்ளிக்கு செல்லும் பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும் பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.

அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில் காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும் போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல் இருக்கும் அப்பாவித்தானமான முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட அவன் நவ நகாரிகமாக இருந்தான் அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் ..
.

இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்

அடுத்த நாள் அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன் நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான் அவன் கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு சென்று விட்டான்..ஆனால் காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால் நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.


அவள் ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன் நிற்க்க கண்டதாக நினைப்பு.

இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும் அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.

அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்

அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன் அவனை தேடி கொண்டிருக்கிறாள். அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன் மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.

அந்தி தேவன் கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சன ங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தனர்.
பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள் மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.
அங்கங்கை பிரேதம் கிடக்காம் உண்மை பொய் தெரியாது என்றது ஒன்று.
இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.
அப்பொழுது சைக்கிளில் வந்த
பொடியன் ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.
முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று.. .
அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது ..ஏனென்றால் அவளும் பிரதேமாக அவனருகில் கிடந்திருந்தாள்.
-----------------------------------------------------------------------------------------------

(2) ஒரு தற்கொலை முயற்சி (சிறுகதை)





அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்

படத்தை ரசித்து பார்த்த
அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமாக கூறிய வச னத்தை
திரும்ப திரும்ப தனக்காக கூறியது போல் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தான்.திரையில் வேறு காட்சியும் ஓடியும் அவனுக்கு அந்த காட்சியும் வசனமும் தான் தொடர்ச்சியாக ஓடி கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் இருந்த நண்பனுக்கு ஆச்சரியம்..அழுவதுக்கு ஒன்றுமில்லை அப்படி அழுவதென்றாலும் ஏன் இந்த படத்துக்கு வந்தோமோ என என்று நினைத்து அழத்தான் ஒன்று இருக்கிறது ..உன்னையும் அவனுக்கு பிறந்த உன் பிள்ளையையும் ஏற்று கொள்ளுகிறேன் என்னுடன் வந்துவிடு...என்ற வசனம் வந்த இடத்திலிருந்து அவன் மோகன் அழுது கொண்டிருக்கிறான் என்பது அவனுடன் வந்தவனுக்கு தெரியாது மட்டுமல்ல . அந்த வசனம் வந்ததே தெரியாத மாதிரி தான் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்

..
கடல் நோக்கி ஓடும் ஆறு மாதிரி கன்னங்களில்இரு பக்கங்களிலும் கண்களிலிருந்து ஒழுகும் கண்ணீர் தங்கு தடையின்றி ஒழுகி கொண்டிருந்தது.அந்த வழியும் கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பி இதை தான் அவளிடம் கேட்டேன் என்று அவளிடம் யாசித்ததை பொருத்தி இவனிடம் ஒப்புக்கொடுத்தான்.அவனின் நண்பன் அவனின் அந்தரங்கங்களை நன்கு அறிந்தவன் ,,அதையும் மீறி அதையெல்லாம் அசிங்கங்களாக நம்புகிறவன் கூட ..அதனால் அவர்களிடேயே அடிக்கடி விவாதம் நடைபெறும் ....அதனூடாக நட்பு என்ற போர்வையில் அவர் அவர்களின் தனித்தன்மை அழிக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதுண்டு ..அதே போல் இப்பொழுதும் அப்படி ஒரு தர்க்கம் தொடங்கி விட்டது .படம் முடிந்ததது என்று தெரியாமால் விவாதத்தினூடாக நடக்கிறார்கள் வெளியேறுகிறார்கள் .ஆத்திரபடுகிறார்கள் பரிதாபப்படுகிறார்கள் ..படம் பார்க்க வந்தவர்கள் மூணு மணி நேரம் போனது முப்பது மணி நேரம் போனது மாதிரியான உணர்வுட ன் வெளியேறுகிறார்கள். வெளியே வெப்பம் தகித்து மதியத்தை கொதி தண்ணியாக்கி அத்தெருவில் போகிற வருகிறவர்களை குதிக் காலில் நடக்க வைத்து பரத நாட்டிய கலையை உருவாக்கி கலை சேவை செய்து கொண்டிருந்தது. இந்த எந்த பிரச்சனை எதுமின்றி அவர்களின் பிரச்சனையே மையமாகி உரத்த குரலில் தர்க்கம் செய்து கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.பஸ் நிலையம் வந்தது கூட தெரியாமால் பஸ்ஸில் ஏறுகி றார்கள்
.

உள்ளுக்குள் அழுது பொருமி உருகி குமைந்து கொண்டிருந்த மோகனின் உணர்வுகளை .இந்த பஸ் கூட தாங்கமாட்டாமாலோ என்னவோ முக்கி முனகி தான் நகர்ந்து கொண்டிருந்தது. திருவிழாவில் காணமால் போன குழந்தை மாதிரி அவனது மனதும் தனித்துவிட அங்கும் இங்கும் தாவியது. .நண்பன் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றது கூட தெரியாமால் மனது எதிரும் புதிருமாக நின்று யுத்தம் செய்து கொண்டு இருந்தது. தீடிரேன்று ஏதோ முடிவு வந்து விட்ட மாதிரியும முகத்தில் அப்ப அப்ப இடைக்கிடை சில ரேகைகள் வந்து மின்னல் வேகத்தில் வந்து மறைந்து கொண்டிருந்தன. முடிவை நிறை வற்ற நினைக்கும் மனதின் வேகத்துக்கு பஸ்ஸின் வேகம் ஈடு கொடுக்காததை நினைத்து இப்ப ஒரு புதிய வேதனையுடன் அவனது முகம் தவித்து கொண்டிருந்தது.


ஆளை மயக்கும் கவர்ச்சிகரமானவாக இருந்தாலும் இயல்பாகவே கூச்சம் சுபாவம் உடையவன், அவனோட்டை பொடியன்களிலும் வித்தியாசமாகவே இருந்தான் .உணர்வு தரும் இலக்கணங்களையெல்லாம் இலக்கியமாக்கி கொள்ளுபவன் . அவனும் கவிதை என்ற பெயரில் ஏதோ ஏதோ எல்லாம் கற்பனை பண்ணி கிறுக்கி வைப்பான். கவிஞர்கள் வர்ணிக்கும் வர்ணணை கற்பனைகளை எல்லாம் நிஜம் என கற்பனை பண்ணி கொண்டிருந்தான் ..அது போலவே காதலையும்...அதையும் மனதில் விக்கிரகபடுத்தி ஆலோபனை செய்து பூஜை செய்து தெய்வீகபடுத்தி வைத்திருந்தான் கனகாலமாக..இவன் மேல் மன்மத கணைகளை எறிந்த அவனுக்கு ஒத்த பெண்களை கூட அலட்சி படுத்தியே இருந்தான் . ஏனோ தெரியவில்லை...அவனுக்கு அவனிலும் பார்க்க வயதுக்கூடிய பெண்களை பார்க்கும் போது மனதில் பூ பூக்கும் ...அதை கூட நேரிடையாக கூட பார்க்க முடியாத கோழையாக இருந்தான்.

அவன் பாடசாலையை விட்டே நாள்கள் மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன..பொதுவாக மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் சோம்பலை கொன்று தூக்கத்திலிருந்து எழும்பி வீதியில் சென்று பல காலமாகி விட்டது. அதனால் அவனது மூன்று வீடு தள்ளி புதிதாக வாடகைக்கு கூடியேறிய அவளை காண அவனுக்கு காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பள்ளி செல்லும் நேரத்தில் அவள் வீட்டுக்கு முன் நிற்பாள் தனது மகனை பள்ளிக்கு அனுப்பு நோக்குடன்.அவளது கணவன் திருமணம் செய்து சுகத்தை அறிமுக படுத்திவிட்டு மிகுதி சுகத்தை கடிதம் மூலம் வெளிநாடு ஒன்றிலிருந்து கொடுத்து கொண்டிருந்தான் .அவளின் அழகான விழிகளில் பொய்யான சுக அனுபவிப்பு தெரிந்து கொண்டு இருக்கும்....அவளது இளமையின் உணர்வுகளை கொல்லும் இந்த சமூக கோட்பாடு கவசகங்ளுடன் காலத்தையும் துரத்தி கொண்டு இருந்தாள்.....


அன்று ஒரு நாள் பள்ளி செல்லும் நேரம் சைக்கிளில் செல்லும் போது அவளது மகனை ஏற்றி செல்ல கேட்ட பொழுதிலிருந்து அவனுக்கு அவளின் அறிமுகம் கிடைத்தது...இயல்பாக பழகுவது மாதிரி பழகினாலும் இரண்டு பேரும் வெவ்வேறு தளத்தில் நின்று வெவ்வேறு கோணத்தில் அணுகி கொண்டிருந்தனர்.அவனோ காரணம் தெரியாமேலே இவள் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு இவ்வளவு காலமாக பூட்டி வைத்த விக்கிரகத்துக்கு ஆராதனை செய்து காதல் என்று பெயரிட்டு திருவிழா கொண்டாடி கொண்டிருந்தான். அவளோ தனது தனிமையை போக்க குற்ற உணர்வு என்ற வெடி குண்டை கட்டி கொண்டு இவன் மூலம் இனிமையாக்க முயன்று கொண்டிருந்தாள்.


கடிதத்தில் இவ்வளவு காலமும் சுகம் அனுப்பிய அவளின் கணவன் நெடுகவும் வெளிநாட்டில் திரவியம் தேடி கொண்டிருக்க முடியமா ...நாடு திரும்ப போகும் செய்தி வந்தது. அவள் அவன் தன்னிடம் விலகி நிற்குமாறு கேட்ட பொழுது நடந்த உரையாடலின் போது தான் .....அந்த திரை பட உரையாடல் போன்ற தொனியில் இவன் அவளை பார்த்து கேட்டிருக்கிறான் ...அப்போது தான் அவனது வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அவன் கட்டிய காதல் கோட்டையை பற்றி தெரிந்தது ...அவன் அவளை வெறுக்க வேணும் என்பற்க்காக ...அப்படியொரு தொனியில் அந்த கடைசி சந்திப்பில் பேசியிருக்கிறாள்....அப்பிடியொரு இழி பேச்சை வாழ் நாளில் அவன் கேட்டிருக்க மாட்டான்.


அவன் தனது வாழ்நாளை முடிக்கும் நோக்குடன் பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டிருந்தான். அந்த பஸ்ஸும் அவனுக்கு யமலோக அழைப்பாணையை கொடுத்து விட்டு சோகத்துடன் செல்லுவது போல் அவனை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது தான் தொலைக்காட்சி அறிமுகமான காலம் . அதுவும் சில வீடுகளில் தான் இருக்கும் அந்த வீடுகளும் பனை உயர அன்ரனாக்களை கட்டி தொலைக்காட்சி இருப்பதை பறைசாற்றி கொண்டிருக்கும்....அவளது வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி .அவ்வூர் அரைவாசி சனங்களும் அங்கு பிரச்சனம் .அது போல அவனது வீட்டிலும் யாருமில்லை .அவனது முடிவுக்கு அனுக்கூலமானது..விட்டத்தில் விவாசய பயன்பாட்டுக்காக தொங்கி கொண்டிருந்த பொலிடோல் என்ற நச்சு திரவாகத்தை தன்னை அழிக்க பயன் படுத்தி கொண்டான் அவளது வீட்டில் கும்மாளமும் குதுகாலமும் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இங்கு அவன் அரை குறை உயிரில் துடித்து கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரி கட்டில் துடித்து கொண்டிருக்கிறான் .இப்பொழுது உயிர் தப்ப வேணும் என்று துடித்து கொண்டிருக்கிறான்.. கடைசி நேர உயிர் ஆசையில் தன்னை எப்படியும் காப்பற்றும் படி டாக்டர் நர்ஸ் பார்த்து கெஞ்சி கொண்டிருக்கிறான்...பொலிசார் சூழ இன்னுமொரு தற்கொலை முயற்சி செய்த பொடியனை கொண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த பொடியனோ டாக்டரிடமும் இரகசியமாக கூறுகிறான் தன்னை இறக்க விடும்படி ....என்னவோ தெரியாது அந்த அரசியல் பொடியன் இறந்து விட்டான் இவன் மோகன் எப்படியோ என்னவோ தெரியாது தப்பி விட்டான்.

காற்று வாக்கில் அவளிடம் செய்தி மாறி போனது ....தற்கொலை செய்ய முயற்சி செய்த பொடியன் இறந்து விட்டான் என்று .மோகன் தான் இறந்து விட்டான் என்று தனது குற்ற உணர்வு டன் அவளும் ஒரு தற்கொலை முயற்ச்சி எண்ணத்துடன் அதற்க்கான ஆயத்தங்களை செய்யும் போது ...பாடசாலை சென்று திரும்பிய மகனின் அம்மா என்று விளிக்கும் குரல் கேட்கிறது..அதே நேரம் பின்புலத்தில் இவ்வளவு நடந்து இருக்கு என்று எதுவும் தெரியாத அவளது கணவன் சந்தையிலிருந்து திரும்பி வந்து அவளை வாஞ்சை யுடன் கூப்பிடும் குரலும் கேட்கிறது.

தூங்கி சாவதுக்கு சுருக்கு கயிறுடன் நிற்கும் அவள் தூங்குவாளா இல்லையா என்பது இந்த கணம் மாறி அடுத்த கணம் வரும் போது தெரியும்.





----------------------------------------------------------------------------------------------


( 3) ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)






நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து
ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இந்த பரதேசி மோகன் ஊத்தி விட்டானே..அவன் ஊத்தினால் எனக்கு என்னுடைய மதி எங்கை போனது ?தமிழில் இப்படி உளறுவுதை கண்ட எனது முதுகு பிறகு பக்கமாக நின்ற வெள்ளை இனத்தவன் ஒன்று தனக்கு தான் ஏதோ ஒன்று சொல்லுறன் என்று நினைத்து வள் என்றோ வட் என்றோ ஏதோ சொல்லி என்னை பார்த்து முறுகினான் .

கிழமை முழுவதும் யந்திரமாய் சுழன்று வேலை செய்து வார கடைசி எப்ப வரும் என்று துடித்து காத்திருந்து குடித்து கும்மாளமடித்து களைப்பை இறக்கி செல்லும் இப்படியான கூட்டத்துடன் பயணம் செய்து கன காலம் ....அதனால் அவர்கள் போடும் எல்லா அட்டகாசமும் கூச்சலும் கும்மாளமும் இந்த வெறியில் கூட என்னால் சகிக்காமால் விலகி இருக்க இடம் தேடினேன் ..இந்த இரைச்சல்களின் ஒலியை மீறி கிழித்து ஒலித்து ஓய்ந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது ரயில்..இறங்கினார்கள் ஏறினார்கள்..அப்போது அந்த பெட்டியின் மூலையில் இடம் காலியாக கண்டு யாரும் பிடித்து விடுவார்களோ என்று அவசரப்பட்டு ஒரு தவளை பாய்ச்சல் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து கொண்டேன்.

அந்த சீட்டுக்கு முன் சீட்டில் சாவகாசமாக அதுவும் இந்த நேரத்தில் கூட புத்தகம் வாசித்து கொண்டு எதேச்சையாக என்னை பார்த்து விட்டு தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தாள். ஒரு வெள்ளை இனத்து பெண்.அந்த ஒரு கணம் தான் இருக்கும் இருவரின் பார்வை சந்தித்து இருக்கும் ..ஆனால் எனக்கோ பல நாள் பழகிய பந்தம் மாதிரியான ஓர் உணர்வு. அவள் திரும்பவும் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. இந்த வெறி செய்யும் வேலையாக இருக்குமோ என்று நினைத்தேன்.சிலரை காரண காரியமில்லாமால் பிடித்து போவதுண்டு இடம் காலம் கூட பார்க்காமால் கூட.. எனது பார்வையின் அரவம் கண்டாளோ என்னவோ அல்லது தனது பாதுகாப்பை கருதியோ என்னவோ படிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒருதரும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள் ..எனக்கு சொல்லவா வேண்டும் .அவளது புன்னகை சிந்த முன் இதற்க்காக காத்திருந்தவன் போல நானும் விரைந்து புன்னகைத்து அதை ஏந்தினேன். நான் போகும் இடத்துக்கு செல்ல இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் ..அதுவரை இவள் இருப்பாளோ அதற்கு முன் இறங்குவளோ அப்படி இறங்காமால் இருந்தால் என்றால் ,பேச்சு கொடுத்து பார்த்தால் ,அவள் என்னுடன் பேசினால் ,அப்படி அப்படி நினைத்து கொண்டிருந்தால்...

ஹி ஹி ஹி... என்று நைந்த நக்கல் குரலுடன் சிரிப்பை கக்கி விட்டு தொடர்ந்தது அது . இரண்டு கழுதை வயது ஆகிவிட்டது உனக்கேன் உந்த புத்தி இப்படி போகுது என்றது...வேற யாருமில்லை எனது மனம் தான் ..உங்களுக்கும் கேட்காது முன்னுக்கு இருக்கும் அவளுக்கும் கேட்காது ஆனால் அது பேசுவது கதைப்பது சிரிப்பது கோபிப்பது எல்லாம் எனக்கு தெளிவாக கேட்கும்..இந்த மனம் சிலவேளை எனக்கு கதை சொல்லும் என்னுடன் சண்டை பிடிக்கும் செல்லம் குத்தும் ஆலோசனை கூறும் அபப்ப வரும் .அபப்ப வராது.சிலவேளை பொழுது போகாமால் இருக்கும் பொழுது இந்த மனம் வந்து என்னுடன் வந்து கதைக்காதோ என்று ஏங்குவேன் தேடினாலும் நான் விரும்பினாலும் காத்திருந்தாலும் கூட வராது .எங்கையோ சுத்தி திரியும் எங்கை போய்ட்டுது என்றுஎனக்கு கூட தெரியாமால் இருக்கும்...இந்த மனதின் ஒரு கெட்ட பழக்கம் நேரம் காலம் தெரியாமால் வந்து தொந்தரவு கொடுக்கும் ...கதை கேள் கேள் என்று சொல்லி..

உன் பாட்டில் என்ன பினாத்தி கொண்டு இருக்கிறாய் நல்ல ரசமான கதை சொல்லுகிறேன் கேட்கிறாயா என்றது... தனது சொந்த கற்பனையை வர்ணஜாலம் செய்து எழுதும் இலக்கியவாதிபோல் இட்டு கட்டி சொல்லும் கதை என்று நினைக்காதே ...நிசமாய் நடந்த உண்மை கதை ..உனக்கே கதையின் மாந்தர்கள் கூட ரொம்ப பழக்கமே என்றது மனம். சொல்லு சொல்லு என்று கெஞ்சி கொண்டு ஆவலுடன் இருப்பேன் என..நினைத்து தன் பாட்டில் கதை சொல்ல ஆயத்தமானது ...நிறுத்து நிறுத்து என்று வாய் விட்டே சத்தமே போட்டு விட்டேன் .அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மொழி விளங்கா விட்டாலும் இந்த ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி தான் சத்தம் போடுறான் என்று அனுமானித்து என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கவில்லை .முன்னுக்கு இருக்கும் அவளும் ஒரு மாதிரி பார்த்தது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

மனதிடம் முரண்டு பிடிக்காமால் அமைதியாக அனுசரித்து கதையை வேற ஒரு நாள் பார்க்காலம் இப்ப என்னை விடு என்றேன் .உனக்கே அடுக்கமா இந்த சனிக்கிழைமை இரவில் அதுவும் அழகான வெள்ளை இன பெண்ணோடு ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது இப்பிடி குழப்பலாமா என்றேன்... இல்லை சொல்லுவேன் என்று சின்ன பிள்ளை மாதிரி சிணுங்கி மீண்டும் அடம் பிடித்தது ....இயலாத கடைசியில் கதையை சொல் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி வேட்டு எனது லீலைகளில் கவனமாக இருந்தேன்.
அது சொல்ல தொடங்கி விட்டது...மள மளவென..

அன்று நடந்த விளையாட்டு போட்டியில் எவ்வளவு சனம் ,,விளையாட்டும் அங்கங்கை நடந்து கொண்டு இருந்தது..ஆக்களும் அங்கங்கை கூடி கதைத்து , கூடி குடித்து ஞாபங்கள் மீட்டி கொண்டிருந்தனர் .இதிலை கடலை போட்டிருக்கின்ற இவனும் வந்திருந்தானே ..இவனுக்கு எங்கை அங்கை நடந்தது ஞாபகம் வரப்போகுது

..இப்ப இருக்கிறதிலும் பார்க்க நாலு மடங்கு குடியுடன் அல்லவா அன்று இருந்திருந்தான். இவனது குடி தான் ஊருக்கெல்லாம் தெரிஞ்ச மாதிரி தானே ..கி.மு கி.பி மாதிரி குடிக்கு முந்தி குடிக்கு பிந்தி என . குடிக்க முந்தி வர்க்கம் புரட்சி மசிர் மண்ணாங்கட்டி,புண்ணாக்கு என என்னனோவோ எல்லாம் கதைப்பான் ,கு.பி அவனது பேச்சு நடை பாவனை எல்லாம் எதிர்மாறாய் இருக்கும் ....இவனை பற்றியா சொல்ல வந்தது இல்லையே ..நான் சொல்ல வந்தது அன்று விளையாட்டு போட்டி வந்திருந்த இவனுடன் ஊரில் அந்த காலம் கூடி திரிந்த ராஜாவே பற்றி , அவனுக்கு என்ன என்று கேட்கிறியளா ..இவனுக்கு தான் நல்லா தெரியுமே அவனுடைய காதல் கதை ...அந்த பிற்சேர்க்கையான.இருபது வருடங்களுக்கு பின் நடந்த விசயத்தை ..இங்கு அந்த விளையாட்டு போட்டியில் நடந்த அதிசயத்தை.சொல்லத்தான் வந்தேன்..நான் கதை சொல்லுறன் கேட்காமால்.அங்கை பாருங்களேன் இவ்வளவு வெறியிலும் ...அந்த பெண்ணுடன் வழிந்து சரசம் குத்திக்கெண்டு இருப்பதை. என்றது மனது.

என்ன என்னைப் பற்றி வர்ண்ணை சொல்லி கொண்டிருக்கின்றாய் என்று இடைமறித்து கேட்டேன் , எனக்கும் அவளுக்கும் இந்த கணங்களில் நடக்கும் கதையில் இருக்கும் சுவாரசியம் உனது கதையில் இல்லையே என்றேன் ... அதற்க்கு மனது கதையின் முடிவுதான் சுவாராசியமானது ...அதுக்குள் அந்தரப்படுகிறியே என்றது .அப்படி என்ன சுவராசியம் நடந்தது என்று அலுத்து கொண்டு கேட்டேன் ..உனக்கு அவனது காதல் நிறைவேறாது போனது தெரியும் ..அந்த விளையாட்டு போட்டியில் இருபது வருடங்களுக்கு அவனும் அவளும் தற்செயலாய் திருப்ப சந்தித்து கதைத்ததால் ..இந்த .இருவரும் தங்களது கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாவற்றை விட்டு துறந்து விட்டு இணைத்து விட்டார்களாம் ....எப்படி இருக்கிறது .....என்றது .மனது.

நல்லாயே இல்லேயே என்றேன் ...நீ ரசனையே இல்லாதவன் என்று அந்த காலம் அவனது காதலை நீ விமர்சிக்கும் போது அவன் சொன்னது சரி போலை என்றது நகைப்புடன்.

அவனைப்போல பைத்தியக்காரன் என்று நினைத்தானா என்னை?. .வேணுமென்றால் இதோ இவளிடம் கேட்டு பார் எனது ரசனையின் அளவுகோலை .என்றேன்.

அப்பதான் மனது . எனக்கும் அவளுக்கும் நெருக்கத்தை . பார்த்திருக்கும் போலை கோபத்தில் மறைந்து விட்டது

கூப்பிட்டு கூப்பிட்டு மனதை தேடினான் ... மனதை காணவில்லை .. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை சொல்ல இந்த மனம் சாட்சிக்கு கூட இல்லாமால் மறைந்து விட்டதே

இப்பொழுது அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை இந்த ரயில் பெட்டியில்.

...ஒருவன் புல்லாங்குழலை இனிமையாக வாசித்து கொண்டிருந்தான் .. மிதந்து வந்து கொண்டிருந்தது.சிலர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர் ...சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர் ..ரயிலும் அந்த ஒலியையும் அரவணைத்து கொண்டு சென்று கொண்டிருந்தது .
.நானும் அவளும் அந்த மூலையில் ...

இந்த ரயில் இனிமேல் எங்குமே நிற்க கூடாது .வாழ் நாள் பூராவும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று .நினைத்து கொண்டேன்

ஆனால் தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை கடைசி ஸ்டேசனில் சுத்த செய்பவன் தட்டி எழுப்ப தான் தெரிந்தது நான் தான் கடைசி பிரயாணி என்று ..
வெறி கூட முறிந்து விட்டது .. இந்த நிசியில் வீட்டுக்கு எப்படி போவது என்று தெரியவில்லையே ...புத்திசொல்ல மனம் கூட பக்கத்தில்லை இல்லையே...கோபித்து கொண்டு போய் விட்டதே என்ன செய்வது என்று தெரியாமால் விழித்து கொண்டிருந்தேன்.

தீடிரென்று மனம் தோன்றி இப்ப ஒரு கதை சொல்லுட்டுமா என்றது .. இந்த நேரத்தில் கதை கேட்க விரும்பமில்லை தான் ..மனம் முந்திய மாதிரி கோபித்து கொண்டு சென்று விடும் என்ற பயத்தில் சொல்லு என்று பவ்வியமாக கூறினேன்..

உன்க்கும் அவளும் இடையில் நடந்த கதையை தான் சொல்ல போறன் என்றது
மனம் சொல்லிக்கொண்டு வந்தது ..வெளியில் நல்ல பால் நிலா ..நானும் நடந்து வீடு செல்லும் வரையும் கேட்டு கொண்டு வந்தேன்....

மிதுவின் கிறுக்கல்கள்  வலை பதிவுக்காக எழுதப்பட்ட கதைகள் இவை

Saturday, May 22, 2010

ஒரு சிறுகதை

இவனும் ஒரு மேடை பேச்சாளன்


ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.


இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.


இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.

இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..

திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.

அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.

அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.

.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.

இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.


எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.

அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்

அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.

வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்

.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..

.அவரே பேசி கொண்டு இருந்தார் .

அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?

.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்

அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.

எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.

அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.

இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி

இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன. நன்றி-மிது

Sunday, March 28, 2010

அவன் கோமாவில்

அவன் கோமாவில் என்று அறிந்தது இப்போ தான் ,ஆனால் ஒரு வருடமாக இருக்கிறானாம் ...அதை ஒரு செய்தியாக மட்டும் கேட்டு விட்டு செல்லமுடியாமல் என்னுள் ஏதோ...இன்னும்...

.அவனை எனக்கு பாலியல் காலத்திலிருந்தே தெரியும் ......என்ன பாலியல் காலம் ...மீசை அரும்பி குரல் தடிக்கும் காலத்துக்கு முன்பே தெரியும்....ஓடிப் பிடித்து ...கல்லு குத்தி அடிச்சு பிடிச்சு ...கிந்தி தொட்டு ...என...விளையாடிய காலத்திலிருந்தே தெரியும் ...எங்களை போல இருக்கும் சராசரிகளை விட ....கொஞ்சம் ...வசதி ....கொஞ்சம் ....சொத்தின் செழிப்பு அவனில் தெரியும் .. அடிக்கடி மாற்றும் டெரிலின் சேட்டும் .....அந்த சேட்டு பொக்கற்றுக்குள்ளை தெரியும் பொக்கற் மணியும் .....அதாவது ...எங்களுக்கு ...சில்லறைகள் கிடைப்பதே கனவுகளாக இருக்கும் போது ....அவனது பொக்கற்றுக்குள் ...தினமும் ...அலங்கரித்த படி இருக்கும் .....வித விதமான கலரில் தெரியும் ...நிஜ ரூபாய் நோட்டுக்கள்...எங்களையும் சில நேரத்தில் எட்டி பார்க்கும்.......

எங்களை போல இருக்கும் ...பஞ்ச பரதேசிகளுக்கு . காணும் நேரத்தில்...தேவைபடும் நேரத்தில் ...அதை கொண்டு அவன் செலவழிக்க தவறுவதில்லை...அள்ள அள்ள குறையாத செல்வம் இருப்பதால் .. அப்படி செலவழிக்கிறான் போலை என்று சிலர் கூறலாம்....அதுக்கும் ஒரு மனம் வேணுமே ...அது அவனுடமிருந்தது ...எந்த விதமான..மேட்டு குடி மனோபாவம் இன்றி சக மாணவர்களிடம் மிகுந்த நட்பாக இருந்தான்.....வகுப்பு தோழன் எல்லாரையும் நண்பன் என்று சொல்ல முடியுமா .. அல்லது நண்பனை எல்லாம் வகுப்பு தோழன் என்று சொல்லமுடியுமா...என்ற ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு பார்த்தால்....என்னை அடிக்கடி காணுகின்ற அல்லது காண விரும்புகின்ற ...என்னுடன் சுக துக்கங்கள் உலக நடப்புகளை பகிர்ந்து கொள்கிறவனாகவாக இருந்தான்.....இதனால் இவனை எனது நண்பன் என்ற வரைக்குள் உட்படுத்தலாம் ..சில வேளை உட்படுத்த முடியாது.....காரணங்கள் பல.....அதை இப்ப விடுவம்

இவனது தகப்பனார்...புகழ் பெற்ற கல்லூரியில்...உயிரியல் ஆசிரியராக இருந்தது மட்டுமன்றி ...யாழ் உள்ள தனியார் டியூட்டரிகளில் புகழ் பெற்ற ஆசிரியராகவும் இருந்தார்......

இவனுக்கு ....சிறு வயதில் இருந்து ....மற்றவர்கள் செய்யாத செய்யமுடியாததை செய்து காட்ட வேண்டும் என்ற வெறி இருந்தது ,,,,,அத்துடன்....மற்றவர்கள் அவனை வித்தியாசபடுத்தி பார்க்கவேண்டும் என்பதற்க்காக மற்றவர்கள் எதிர்பார்க்க முடியாத விசயங்களை கூட..
செய்வான்...

பத்தாம் வகுப்பில் ...உயிரியல் பாடத்தில்....இனப்பெருக்கம் ....என்ற தலைப்பு இருக்கும்......அந்த பாடம் படிப்புக்கும் காலமும் வந்தது....எங்களுக்கும் அரும்பு மீசை முளைத்து ...குரலும் கொஞ்சம் தடித்து .....உடம்பிலும் மனதிலும் ஏதோ வீணை வாசிப்பது போன்று இருக்கும் காலம் ...எதையும் ஆழமாக அறியும் விரும்பும் காலமும்... கூட....

இவனது தகப்பனார் தான் ..படிப்புகிறார்.....இவனும் அந்த வகுப்பில்.....இனப்பெருக்கம் என்று எழுத்தில் கரும்பலகையில் ..எழுதும் ..போதே...வகுப்பில்..சிறிய அடக்க முடியாத மெல்லிய சிரிப்பு ....ஆண் குறி ...பெண்குறி...படம் காட்டி ....விளங்கபடுத்த போக ....விளங்க படுத்த முடியாத,,,மெளன சிரிப்பொலி ...இப்படி இருக்க...மாஸ்டருக்கு ......தேவையில்லாத வேலை தானை...யாருக்கும் இந்த பாடத்தில்..சந்தேகம் இருந்தால் கேளுங்கோ என்று சொல்ல.........அவரது கஸ்ட காலம் இப்படி வரும் என்று கடைசி வரையும்...அவரும் ..நினைத்திருக்க..மாட்டார்.......

யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி எல்லோரும்..அமசடக்காக..இருக்க..
வன் தான் இனப்பெருக்கத்தில்..சந்தேகம் கேட்டான்...அவனின் தந்தையிடம் தான் கேட்டான் ....அந்த பதினைந்து வயதில் கேட்டான்.......அவனது தந்தையும்....ஆசிரிய,..தர்மத்தை மீற முடியமால்....அவனுக்கு ...எங்கள் முன் இனப்பெருக்கத்தின் இரகசியத்தை அவனது பிறப்பின் இரகசியத்தை விளக்கமளித்தார்....

உயர்தர மாணவர்களுக்காண ஒன்று கூடல் நடைபெறும் பொழுது ...எல்லோரும் ஒரே விதமான உடுப்பு போட்டு இருக்கும் போது ....இவன் ...மட்டும்....நஷனலும் வேட்டியும் உடுத்தி அங்குள்ளவர்களை பரபரப்பாக்கினான்.

இப்படி இவனது சாகசங்கள்..பல...பள்ளி படிப்பு ..முடிந்த பின்...அவன் ..கட்டிட கலை பொறியியல் படிப்புக்காக..பல்கலை கழகம் போனான்..அந்த படிப்பையும் 83 யூலையால்...அவன் முடிக்கவில்லை...

காலங்கள் ....எங்களை...கன காலம் சந்திக்க விடவில்லை....ஒருநாள்....புலத்தில
் ..மீன் கடையில்...மீன் வெட்டி கொண்டு வேலை செய்ய கண்டேன் ..அதே சாகசத்துக்காகவோ என நினைத்தேன்

..அதே பழைய உரிமையில் தான் என்னுடன் கதைத்தான்..

அவனை பற்றி காது வழிசெய்திகள்தான் ...இப்ப சொல்வது....ஒரு பிரபல கவிஞனின் முதல் மனைவியை தனது முதல் மனைவியாக கொண்டான்...இதையும் வித்தியாசமாக முந்தி செய்த மாதிரி நினைத்து செய்தானோ என்னவோ தெரியவில்லை ...இவனது குடும்பத்தினர் ....உறவினர்கள்..நண்பர்கள்..ஒதுக்
கி வைத்தனர்....இவனது வாழ்க்கை முறை மாறியது கடன் குட்டி போட்டது ..கடன் கொடுத்தவர் தொல்லை கொடுத்தனர்..தொல்லையை மறக்க முனைந்தான்..மறக்க வழி தேடினான்.........இப்ப தன்னை மறந்து ...கோமாவில்.....

அவனுக்கு ..70 களில் இருந்த கால நினைவுகள்

மட்டுமே ஞாபகத்தில் சாடையாக இப்ப வருகின்றன....அந்த நாட்கள் ஞாபகங்கள் இனிமையானவை தான் ...என்றாலும் பாவம் அவனுக்கு அவை மட்டுமே வருவது பரிதாபம்

அவனை பார்க்க சென்றேன்
.
.எமது உருவங்கள் அந்த காலம் போல இல்லாததால் ...என்னையே ..பரக்க பரக்க பார்க்கிறான்.....அடையாளம் தெரியாமால்....